30 ஆண்டுகளுக்குப் பின் ஓடிய "நீராவி எஞ்சின்" ரயில்: மக்கள் பரவசம்
சென்னை:
இந்திய ரயில்வேயின் 150வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு அந்தக் கால நீராவி எஞ்சின் ரயில் விடப்பட்டது.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நீராவி எஞ்சின் ரயில்கள் தான் ஓடிக் கொண்டிருந்தன.
அதை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நீராவி எஞ்சினை இன்று ஓடச் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு (சுமார் 50 கி.மீ. தூரம்) இந்தச் சிறப்பு நீராவி ரயில் கிளம்பிச் சென்றது. மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி தேசியக் கொடியை அசைத்து இந்த ரயில் ஓட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த நீராவி எஞ்சினுடன் பொருத்தப்பட்டிருந்த ஏழு பெட்டிகளில் பல பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும், சில ஆசிரியர்களும், ரயில்வே அதிகாரிகளும், பத்திரிக்கை நிருபர்களும், சில வி.ஐ.பிக்களும் பயணம் செய்தனர்.
ஆனாலும் வழி நெடுகிலும் உள்ள ரயில் நிலையங்களில் ஏராளமான குழந்தைகளும் இளைஞர்களும் இந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் இப்போது தான் இது போன்ற நீராவி ரயில் எஞ்சின் கரும்புகையை வெளியேற்றிக் கொண்டே தண்டவாளத்தில் ஓடியதை முதன் முதலாகப் பார்க்கின்றனர்.
இந்த நீராவி எஞ்சின் போட்ட வித்தியாசமான ஹாரன் ஒலி கூட பல மக்களையும் நின்று திரும்பிப் பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தியது.
40 அல்லது 50 வயதைத் தாண்டியவர்கள் கூட அதிகமான அளவில் ரயில் நிலையங்களுக்கு வந்து அந்தக் கால நீராவி எஞ்சினைப் பார்த்து தங்களுடைய பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.