துணை ஜனாதிபதி தேர்தல்: தபால் மூலம் ஓட்டு போடுகிறார் வைகோ
சென்னை:
வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 15ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர் வேலூர் சிறையிலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்க சிவகாசி தொகுதி எம்.பியான வைகோ முடிவு செய்துள்ளார்.
இதற்காக தபால் மூலம் வாக்களிக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகள் மூலம் தேர்தல் அதிகாரிக்கு வைகோ விண்ணப்பம் அனுப்பினார்.
வைகோவின் கோரிக்கையைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டு அவரைத் தபால் மூலம் வாக்களிக்க அனுமதித்துள்ளார்.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வைகோவுக்கு ஓட்டுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங் ஷெகாவத்தும் காங்கிரஸ் சார்பில் சுசில் குமார் ஷிண்டேயும் நேரடியாகப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications