சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 கூலிப்படையினர் கைது
சென்னை:
கடந்த மாதம் வழக்கறிஞர் மதனகோபால் நடு ரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சர்வதேசப் போதைக்கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொலையாளிஉள்பட 2 கூலிப்படையினரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்த மதனகோபால் (45) தன் மனைவி மற்றும்மகளுடன் பொருட்கள் வாங்குவதற்காக கடந்த ஜூலை 6ம் தேதி இரவு பாண்டி பஜார் பகுதிக்குக் காரில் வந்தார்.
வாங்கிய பொருட்களைக் காரில் வைப்பதற்காக அதை நோக்கி வந்தபோது, திடீரென்று மதனகோபாலுக்குப்பின்னால் வந்த ஒருவன் அவருடைய பின்னந் தலையில் துப்பாக்கியால் சுட்டான்.
தலையில் குண்டு பாய்ந்த மதனகோபால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனகோபால் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்வழியிலேயே
பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நான்கு தனிப் படைபோலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும்சென்று இந்தப் போலீசார் விசாரணை நடத்தினர்.
போதைக் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு:
பிரபல கிரிமினல் வழக்கறிஞராக இருந்த மதனகோபால், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குகளில் அதிகஅளவில் ஆஜராகி குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்.
எனவே போதைக் கடத்தல்காரர்கள் தான் இந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும்போலீசார் விசாரித்து வந்தனர்.
மாட்டினான் கொலையாளி:
அதன்படி மத்தியப் பிரதேசத்தில் அம்மாநிலப் போலீசாருடன் நடத்திய தீவிர விசாரணையில் உஜ்ஜயினிமாவட்டத்தில் ஒளிந்திருந்த ஜலீல் என்பவன் தான் இந்தக் கொலையைச் செய்துள்ளான் என்பது தெரிய வந்தது.
போலீஸ் பாணியில் அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது ஜலீல் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.
மேலும் அவன் கொடுத்த தகவலைக் கொண்டு அதே மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர ஷர்மா என்றமற்றொருவனையும் போலீசார் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள போதைக் கடத்தல் கும்பலின் தலைவன் ஹசன் என்பவன் தான் இந்தக் கொலையைச்செய்யுமாறு கூலிப்படையினரை ஏவி விட்ட விவரமும் தெரிய வந்துள்ளது.
பணம் பெற்று, தண்டனையும் வாங்கிக் கொடுத்து...
ஹசன் கொடுத்த ரூ.40 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும், போதைக் கடத்தல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட அவனுடைய ஆட்களுக்கு வழக்கறிஞர் மதனகோபால் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த அவன் கூலிப்படையினரை ஏவி அவரைக் கொன்று விட்டான். ஜலீல் தான் இந்தக்கொலையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளான்.
கொலையாளி ஜலீலையும் கூலிப்படையைச் சேர்ந்த மற்றொருவனையும் கைது செய்த தனிப் படை போலீசார்அவர்களைச் சென்னைக்குக் கொண்டு வந்துவிட்டனர். ஹசனையும் கூலிப்படையைச் சேர்ந்த இக்பால்என்பவனையும் போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.
வழக்கறிஞர் மதனகோபால் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு மாதம் முடிந்த நிலையில் கொலையாளிகளைப்போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.