"இடம்" தெரியாமல் முழிக்கும் காங்கிரஸ்-தமாகா
மதுரை:
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா நடப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் விழா நடைபெறும் இடம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த இணைப்பு விழாவில் கலந்து கொள்வதைத் தொடர்ந்து விழா நடக்கும் தமுக்கம் மைதானத்தை டெல்லியிலிருந்த வந்திருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர் பார்வையிட்டனர்.
தமுக்கம் தவிர மதுரை மருத்துவக் கல்லூரியின் மைதானத்தையும் பாதுகாப்புப் படையினர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த மைதானம் பிரம்மாண்டமாக இருப்பதால் இங்கேயே விழாவை வைத்துக் கொள்ளலாமா என்று யோசிக்குமாறு பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவும் மதுரை விரைந்து இரண்டு மைதானங்களையும் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைவது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. முழு ஆதரவுடன் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓட செயல்பட்டு வருகிறார்கள்.
திட்டமிட்டபடி 14ம் தேதி இணைப்பு விழா நடைபெறும். அதன் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய பலத்துடன் திகழும்.
இணைப்பு விழா நடைபெறும் இடம் குறித்து இன்று மாலை சென்னையில் முடிவு அறிவிக்கப்படும்.
நாங்கள் சென்னை சென்று தமாகா தலைவர்களுடன் கலந்து பேசி இன்று மாலையிலேயே இணைப்பு விழா நடைபெறும் இடம் குறித்து இறுதியான முடிவை அறிவிப்போம் என்றார் ரமேஷ் சென்னிதாலா.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் விழா நடக்கும் இடம் முடிவு செய்யப்படவில்லை.
இதனால் பந்தலும் போடாமல் மேடையும் போடாமல் மதுரையில் மிகவும் மந்தமான சூழ்நிலை தான் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications