பொடா வழக்கில் தனக்காக தானே வாதாட வைகோ முடிவு
சென்னை:
தன் மீது தொடரப்பட்டுள்ள பொடா வழக்கில் தனக்காக யாரும் வாதாடப் போவதில்லை என்றும் தானே வாதாட முடிவெடுத்துள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோவுக்காக முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லி அல்லது அவருடைய ஜூனியர்களில் யாராவது ஒருவர் வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று வேலூர் சிறையில் வைகோவைச் சந்தித்த மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் பின்னர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில்,
வைகோ என்ன குற்றம் செய்தார் என்று இதுவரை தமிழக அரசு குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. இதைச் செய்ய வேண்டியது அரசின் கடமை.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ஜாமீனில் வெளிவரப் போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பொடா வழக்கில் வாதாடுவதற்காக வைகோ வக்கீல் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்காக தானே வாதாட வைகோ முடிவு செய்துள்ளார்.
சில ஜூனியர் வக்கீல்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வார் என்றார் கணேசன்.