மத்திய கூட்டணியிலிருந்து மதிமுக விலக தமிழர் தேசிய இயக்கம் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பொடா சட்டத்தை எதிர்க்கும் பொருட்டு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுகவெளியேற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் செயலாளர் அழகிரி கூறினார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரியில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள பொடா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. காஷ்மீரில் ஊடுருவிக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே பொடாசட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் மத்தியக் கூட்டணியில் உள்ள மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவே பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எனவே அந்தச் சட்டத்தை எதிர்க்கும் விதமாக மத்திய அரசின் கூட்டணிக்கு அளித்து வரும் ஆதரவை மதிமுகவாபஸ் பெற வேண்டும்.
பொடா சட்டத்தின் கீழ் அரசியல் தலைவர்களைக் கைது செய்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் மிகப் பெரும்அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அழகிரி எச்சரித்தார்.