இங்கிலாந்து நதியில் அஸ்தி கரைக்க இந்தியர்களுக்கு அனுமதி
ப்ராட்போர்ட் (இங்கிலாந்து):
இங்கிலாந்தின் மேற்கு யோர்க்சைரில் உள்ள எய்ர் நதியில் (Aire river) அஸ்தியைக் கரைக்க இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இறந்தவர்களின் தகனம் செய்யப்பட்ட உடலின் சாம்பலை கங்கையிலோ, இமாயலத்திலோ அல்லது புண்ணிய நதிகளிலோ, நீர்நிலைகளிலோ கரைப்பது இந்து மதத்தில் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு அஸ்தியைக் கரைப்பில் பெரும் பிரச்சனை உள்ளது.
இந் நிலையில் இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து அஸ்தியைக் கரைக்க அனுமதி வழங்க பிராட்போர்ட் நகர நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. மேற்கு யோர்க்சைரில் உள்ள இந்த நகரில் வசிப்பவர்களில் தெற்காசியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர்.
மிகப் பெருமளவில் இந்துக்களும் சீக்கியர்களும் இங்கு வசிக்கின்றனர்.
ப்ராட்போர்ட் நகர கவுன்சிலின் கலை, பாரம்பரியப் பிரிவின் இயக்குனர் ஜேன் கிளைஸ்டர் கூறுகையில், இந்துக்களுக்கு அஸ்திக்கரைப்புக்கு அனுமதி கொடுப்பது குறித்து யோசித்து வருகிறோம். அப்பர்லே பாலத்தின் அருகே இதற்காக நதிக் கரையில் இடம் ஒதுக்கலாம்என்று திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்துக்கள் வரவேற்பு:
ப்ராட்போர்ட் நகர நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அங்குள்ள இந்து கலாச்சார சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்களது உடல்கள் எரிக்கப்படுவதால் அதன் அஸ்தியைக் கரைப்பது மிக மிகஅவசியம். வசதிபடைத்தவர்கள் இந்தியா சென்று கங்கையில் அஸ்தியைக் கரைத்துவிடுகின்றனர். ஆனால், மற்றவர்கள் பெரும் சிரமத்துக்குஆளாகினறனர். இதனால், இங்கு அஸ்திக் கரைப்புக்கு அனுமதி தந்தால் மிக உதவியாக இருக்கும் என்றார்.
ஆனால், அஸ்தியைக் கரைப்பதத் நதியின் சுத்தம் கெட்டுப் போய்விடும் என சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்த நகரில் உள்ள 5,23,000 பேரில் 75,000 பேர் தெற்காசியர்கள். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இனக் கலவரத்தில் இந்த நகரமும்பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.