பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கலாம்
போபால்:
ஒரு நாள் பயணமாக போபால் வந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தனது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு திடீரெனபள்ளிக் குழந்தைகள் மத்தியில் போய் நின்று அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.
இதனால் அவரது பாதுகாவலர்கள் பெரும் பரபரப்புக்குளாயினர்.
கல்வி குறித்த சட்டம் தொடர்பான கருத்தரங்கு நேற்று போபாலில் நடந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெரும் அளவில் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தபோதே திடீரென எழுந்த கலாம் மேடையில் இருந்த கவர்னர் பாய் மகாவீரிடம் சென்று பள்ளிக்குழந்தைகளுடன் நான் பேச வேண்டும். இதற்காக மேடையை விட்டு கீழே இறங்குகிறேன். நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது என்றார்.இதைக் கேட்ட கவர்னர், தாராளமாக செல்லுங்ள் என்றார்.
பின்னர் முதல்வர் திக் விஜய்சிங்கிடமும் அதே போல அனுமதி வாங்கிவிட்டு சரசரவென கீழே இறங்கி எதிரே அமர்ந்திருந்த பள்ளிக்குழந்தைகள் மத்தியில் போய் அமர்ந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் அவரை நோக்கி நாலாபுரம் இருந்து ஓடி வந்தனர்.
கலாமின் இந்த திடீர் செயலால் திடுக்கிட்ட பாதுகாவலர்கள் அவரை நோக்கி ஓடி வந்தனர். ஆனால், அவர்களை தடுத்த கலாம், பள்ளிக்குழந்தைகளுக்கு இடைஞ்சல் தராமல் ஒதுங்கி நிற்குமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் குழந்தைகளுடன் தனது வழக்கமான, இயல்பான பாணியில் கலந்துரையாட ஆரம்பித்தார் கலாம். அவர்கள் பல கேள்விகள் கேட்கபொறுமையாக பதில் தந்தார். இடையிடையே இப்போ நான் கேள்வி கேட்பேன் என்று கூறிக் கொண்டு அவர்களிடம் அறிவியல்கேள்விகளைக் கேட்டு அதற்கு விளக்கமும் தந்தார்.
நாடு, தேசப் பற்று போன்றவற்றையும் அவர்களுக்கு போதிக்க கலாம் தவறவில்லை. சுமார் அரை மணி நேரம் பேசிவிட்டு எழுந்த அவரைகுழந்தைகள் விடவில்லை. இன்னும் சிறிது நேரம் தங்களுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து மேலும் சிறிதுநேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் கலாம்.
பல குழந்தைகளும் அவரிடம் கேட்ட முக்கிய கேள்வி, நீங்கள் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவீர்களா? என்பது தான்.
இதற்கு பதிலளித்த கலாம், நான் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். ஜனாதிபதி வேலையைபார்த்துக் கொண்டு ஆராய்ச்சிப் பணிகளிலும் ஈடுபட எனக்கு நேரம் இருக்கிறது என்றார்.
முன்னதாக மத்தியப் பிரதேச சட்டசபைக்குச் சென்ற கலாமை அங்கும் பள்ளிக் குழந்தைகள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.