சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆவாரா எஸ்.ஆர்.பி.?
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து விட்டதைத் தொடர்ந்து சட்டசபை காங்கிரஸ்தலைவர் பதவி எஸ்.ஆர்.பி. என்று அழைக்கப்படும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை (புதன்கிழமை) சென்னையில் நடக்கிறது.அப்போது புதிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து ஒரு மாதம் ஆகிய நிலையிலும் இன்னும் புதியநிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தமாகா தலைவராக இருந்த வாசனுக்கு மட்டும் அகில இந்தியசெயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பதவிக்காக் காத்துள்ளனர்.
இந்நிலையில் கட்சியில் பல புதிய தலைவர்கள் சேர்ந்துள்ளதால் மாவட்டத் தலைவர்களின் பதவியை அதிகரிக்ககாங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகபட்சம் 2 அல்லது 3மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை நான்கு அல்லது ஐந்து ஆக்குவதற்கு காங்கிரஸ் தலைமைமுடிவு செய்துள்ளது.
அதேபோல இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி ஆகியவற்றிலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.முற்றிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். பொருளாளர் பதவிக்கும் புதியவர் நியமிக்கப்படவுள்ளார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியும் மாற்றப்படவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோதாஇப்பதவியில் உள்ளார். இந்தப் பதவி எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்குப் போகலாம் என்று தெரிகிறது.
ஆனால் தீவிர ஜெயலலிதா ஆதரவாளரான யசோதா இதை எதிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும்அதற்குப் பலன் இருக்காது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அகில இந்தியபொதுச் செயலாளர்களான ஆஸ்கர் பெர்னாண்டஸ், ரமேஷ்சென்னிதாலா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
பதவிக்காகக் காத்திருக்கும் முன்னாள் தமாகாவினரையும், பதவியைப் பறிகொடுத்து விடக் கூடாது என்றுஎச்சரிக்கையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரையும் காங்கிரஸ் மேலிடம் சமாளிப்பது கொஞ்சம் கடினமானவேலையாகத்தான் இருக்கும்.
18 எம்.எல்.ஏக்கள் கதி என்ன?:
இதற்கிடையே 18 தமாகா எம்.எல்.ஏக்களையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்குமாறு கோரி எஸ்.ஆர்.பி.கொடுத்துள்ள கடிதம் மீது ஆய்வு நடந்து கொண்டிருப்பதாக சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் காளிமுத்து கூறுகையில்,
தமாகா, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து விட்டதாகவும், எனவே ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் 18எம்.எல்.ஏக்களையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக அங்கீகரிக்குமாறு எஸ்.ஆர்.பி. கடிதம் கொடுத்திருந்தார்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு எம்.எல்.ஏக்களின் பெயர் குறித்து குழப்பம் உள்ளது.இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இரண்டு பேரிடமும் விளக்கம் கேட்டுள்ளேன்.
மேலும், இரண்டு கட்சிகள் இணையும் போது அந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை எப்படி அங்கீகரிப்பது என்பதுதொடர்பாக பிற மாநிலங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான முன் மாதிரிகள் குறித்துக்கேட்டுள்ளேன்.
அவை வந்ததும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இதில் கால தாமதம் தவிர்க்க முடியாதது என்றார் காளிமுத்து.