காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை: ஜெ. பெருமிதம்
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்கள் முழுவதும் ஒரே கருத்தில், ஒற்றுமையுடன் இருப்பதை நேற்றையஅனைத்துக் கட்சிக் கூட்டம் நிரூபித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்தைக் கண்டித்தும் மத்திய அரசின்கையாலாகாத்தனத்தை எதிர்த்தும் தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைபொது வேலைநிறுத்தம் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை மத்திய அரசுக்கும்,கர்நாடகத்திற்கும் எடுத்துக் காட்டும் முதல் நடவடிக்கை இது.
பந்த்தினால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாதுதான். ஆனால், நாம் அனைவரும் ஒற்றுமையாகஇருக்கிறோம் என்பதை கர்நாடகம் உணர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு இந்தப் பொது வேலைநிறுத்தம் ஒரு பாடமாக அமையும்.
மத்திய அரசு காவிரிப் பிரச்சினைையத் தீர்ப்பதிலிருந்து நழுவி விட்டது. எனவே உச்ச நீதிமன்றத்தை மட்டுமேநாம் நம்பியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வேறு வழியே இல்லை. அது தமிழகத்திற்கு நீதிவழங்கும் என்று நம்புகிறேன்.
கர்நாடகம் மீது மீண்டும் அவமதிப்பு வழக்கு:
மேலும் கர்நாடகத்தின் மீது இரண்டாவது அவமதிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படும்.
குறுவைப் பயிருக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைக் கணக்கெடுத்த பின் அதற்கான இழப்பீட்டைத் தரக் கோரிகர்நாடகத்தின் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்படும்.
காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடாது என்று பிரதமர் வாஜ்பாயும், சட்ட அமைச்சர் ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் கூறியுள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடாக அமையும். தங்களது பொறுப்பிலிருந்து மத்திய அரசு நழுவி விட்டதுகூட்டாட்சித் தத்துவத்திற்கே பாதிப்பாக அமையும் என்றார் ஜெயலலிதா.
சுமூகமாக நடந்த அனைத்து கட்சி கூட்டம்:
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டபல்வேறு கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் 35 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்றாலும் பந்த்திற்கு தன்னுடைய ஆதரவைத்தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் திமுக புறக்கணித்தது.கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை எதிர்த்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டகாங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகவும் அமைதியாக நடைபெற்றது. கூட்டத்தில்எடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்த அறிவிப்புக்கு திமுக உடனடியாக ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.