சட்டசபையில் கடும் அமளி: திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்
சென்னை:
போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் அரசு நிபந்தனை இன்றி பேச்சு நடத்த வேண்டும்என்று திமுக கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் காளிமுத்து அனுமதி தர மறுத்ததால் பா.ம.க.,கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர். ஆனால், அவைக்குள் தொடர்ந்து போராட்டம்நடத்திய திமுக உறுப்பினர்கள் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக விவாதிக்க சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி திமுகதுணைத் தலைவர் துரைமுருகன் சட்டசபையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
ஆனால் அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தைப் பற்றிசுருக்கமாகப் பேச வேண்டும் என்று திமுகவினருக்கு அவர் உத்தரவிட்டார்.
பொன்முடி வாதம்:
இதையடுத்து திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி பேசுகையில்,
ஏராளமான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் என்ன புதிதாக ஏதாவது வேண்டும் என்றா கோரிக்கை விடுக்கிறார்கள்? ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று தானே கேட்கிறார்கள்.
"எஸ்மா" சட்டத்தை அரசு பயன்படுத்தியுள்ளதால் தற்போது மாநிலத்தில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே "எஸ்மா" சட்டதை அரசு வாபஸ் பெற்றே ஆக வேண்டும். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனேவிடுவிக்க வேண்டும் என்றார் பொன்முடி.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. இனிமேல் பேசவேண்டாம் என்று பொன்முடியிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பொன்முடி முதலில் என்னைப் பேசி முடிக்க விடுங்கள் என்று கோபமாகக் கூறினார்.அவருடன் மற்ற திமுக உறுப்பினர்களும் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து நின்று கொண்டு கோஷம் போடஆரம்பித்தனர்.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் கூச்சலுக்கு மத்தியில் ஒரு வழியாக பொன்முடி பேசி முடித்தார்.அவரைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழனிச்சாமியும்,மார்க்சிஸ்ட் தலைவர் ஹேமச்சந்திரனும் பேசி முடித்தனர்.
ஜெயலலிதா பதில்:
இதையடுத்து ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு விளக்கம் தந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
அரசு ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே இது நீதிமன்றத்துக்கு உடபட்ட விவகாரம். ஸ்டிரைக் நடத்துவது சட்டப்படி தவறு. எனவே தான் அதைவாபஸ் பெற்று விட்டு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள்நிராகரித்து விட்டார்கள்.
அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டமான "எஸ்மா"வில் 600க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது. அரசு ஊழியர்களைப் பணிக்கு செல்லவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட சில குற்றங்களுக்காக 15 பேர் வரை மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேவைப்பட்டால் "எஸ்மா"வை பயன்படுத்த அரசு தயங்காது. அரசின் நிதி நிலைமை, பொதுமக்களின் அவதிஆகியவற்றை உணர்ந்து அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்றார் ஜெயலலிதா.
ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு மறுப்பு:
முதல்வர் விளக்கம் தந்துவிட்டதால் திமுக கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி தர முடியாதுஎன்று சபாநாயகர் கூறினார்.
ஆனால் இந்த விளக்கத்தை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று துரைமுருகன் கூறினார்.
அப்போது பேசிய நிதி அமைச்சர் பொன்னையன், இந்த அரசு ஊழியர் பிரச்சனையையே திமுக தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. அதை திமுக நிறுத்தினாலே பிரச்சனை தீர்ந்து விடும் என்றார்.
பொன்னையனின் இந்தப் பேச்சுக்கு துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர். பொன்னையனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி துரைமுருகன்சபையிலிருந்து வெளியேறினார்.
திமுகவினர் வெளியேற்றம்:
ஆனாலும் மற்ற திமுக உறுப்பினர்கள் யாரும் வெளியேறாமல், அரசைக் கண்டித்து சபைக்குள்ளேயேகோஷமிட்டனர்.
அவையில் நின்று கொண்டு கோஷம் போடுவது அழகல்ல. அதை நிறுத்த வேண்டும் என்று காளிமுத்து கூறினார். ஆனால்,அதையும் மீறி திமுக உறுப்பினர்கள் கோஷம் போட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக்காவலர்களும் உடனடியாக விரைந்து வந்து திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபையை விட்டு வெளியேற்றினர்.
சட்டசபையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் லாபிலில் நின்றுகொண்டு ஜெயலலிதாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அங்கிருந்தும் அவரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து லாபிக்கு சென்ற காவலர்கள் அங்குகோஷம் போட்டுக் கொண்டிருந்த திமுக உறுப்பினர்களை அங்கிருந்தும் வெளியேற்றினர்.
பா.ம.க, கம்யூனிஸ்டுகள் வெளிநடப்பு:
அடுத்த சிறிது நேரத்திலேயே மணி தலைமையிலான பாமக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அடுத்ததாக ஹேமச்சந்திரன் எழுந்து, அரசு ஊழியர்களை உடனடியாக அழைத்து எந்தவிதமான முன்நிபந்தனையும் இன்றி பேச்சு நடத்த வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அதற்கு ஜெயலலிதாவிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதையடுத்து ஹேமச்சந்திரன்தலைமையிலான மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏக்கள் சபையிலிருந்து கோஷம் போட்டவாறே வெளிநடப்பு செய்தனர்.
அவர்கள் பின்னாடியே இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.
6வது நாளாக போராட்டம்:
இதற்கிடையே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் இனறு 6வது நாளை எட்டியது. மாநிலத்தின் பல இடங்களிலும்அரசு ஊழியர்கள் கொட்டும் மழையில் நின்று போராட்டம் நடத்தினர்.
மதுரையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 139 அரசு ஊழியர்களை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் பலர் மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போனஸ், டி.ஏ. உள்ளிட்ட 15 அம்சங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications