"எஸ்மா" சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கும் "எஸ்மா" எனப்படும் அத்தியாவசியப்பணிப் பராமரிப்பு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் சட்டப் பிரிவுத் தலைவர் சூர்யபிரகாசம் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
கீழ் கோர்ட் உறுப்பினர்களும் போராட்டம் நடத்துவதால் குற்றவியல் நீதிமன்றங்களிலும் பணிகள் முடங்கியுள்ளன.கைதாகி சிறையிலிருக்கும் பலர் ஜாமீனில் வெளியே வரமுடியாமல் உள்ளனர்.
போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சனையைத் தீர்க்கவேண்டிய அரசு, அவர்கள் மீது "எஸ்மா" சட்டத்தைப் பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால்பேச்சுவார்த்தை நடத்த இயலவில்லை என்று சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனால் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் அரசின் கைகளை நீதிமன்றம் தான் கட்டிப் போட்டுள்ளது என்றதவறான எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே "எஸ்மா" சட்டத்தைப் பிரயோகிப்பதை நிறுத்தி விட்டு அரசு ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துஅவர்களுக்கு சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுஅம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.