தமிழர் பகுதிகளுக்கு சுய ஆட்சி தர இலங்கை சம்மதம்: ஓஸ்லோ பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம்
ஓஸ்லோ:
இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுய ஆட்சி அந்தஸ்து வழங்க அந் நாடு முன் வந்துள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்த மிக முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது.
நார்வேயில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று முடிவடைந்தன.
இதில், இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே இரு தரப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட-கிழக்குப் பகுதிகளுக்கு சுய ஆட்சி அந்தஸ்துவழங்கப்படும்.
தாய்லாந்தில் அடுத்த மாதம் நடக்க இருந்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்த அரசியல் விவகாரம் குறித்து பேசமுடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஓஸ்லோவில் இரு தரப்பினருமே மிகவும் விட்டுக் கொடுத்து செயல்பட்டதால் இந்தசுற்றிலேயே முக்கியமான ஒப்பந்தம் எட்டப்படிருக்கிறது.
மேலும் விடுதலைப் புலிகளின் போலீஸ் படையை இலங்கை போலீசுடன் இணைக்கவும் தயார் என புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் தெரிவித்தார். மேலும் இலங்கையின் அரசியல் அமைப்புசட்டத்துக்கு உட்பட்டே தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கினால் போதும் எனவும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் கனடா நாட்டு அரசியல் அமைப்புகளைப் போல கூட்டாட்சியின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுய ஆட்சி தரத்தயாராக இருப்பதாக இலங்கை அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.
தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கு அரசுக்கு மூன்றில்ஒரு பங்கு மெஜாரிட்டி வேண்டும். ரணில் அரசுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனால், பிற கட்சிகளின்ஆதரவுடன் இந்தச் சட்டத் திருத்தத்தை ரணில் நிறைவேற்றுவார் என்று தெரிகிறது.
மேலும் இச் சட்டத்தை ஆதரிக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும்வற்புறுத்தலாம்.












Click it and Unblock the Notifications