கலக்குகிறது அதிமுக: ஒரே ஒரு நம்பிக்கையில் காங்கிரஸ்
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அதிமுகவின் சூறாவளிப் பிரச்சாரத்தில் தொகுதியே கிடுகிடுத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின்சோம்பேறித்தனமான பிரச்சாரம் அக் கட்சித் தொண்டர்களையே கூட எரிச்சல்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே மிச்சம் இருக்கும் நிலையில் திமுக, மதிமுக, பா.ம.கவின் மறைமுகஆதரவு கிடைத்தும் காங்கிரஸ் காட்டி வரும் மெத்தனத்தைப் பார்த்தால் அதிமுக இத் தொகுதியில் எளிதான வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தொகுதியை மண்டலங்களாகப் பிரிக்கப் போகிறோம், மண்டலத்துக்கு 4 பேரைப் போடப் போகிறோம் என்றுகாங்கிரஸ் பேசிக் கொண்டிருந்தாலும் நம் தலையில் செலவு வைத்துவிடுவார்களோ என்று அஞ்சி கதர் வேட்டித்தலைவர்கள் ஓடி ஒளிந்து வருகிறார்கள்.
கோஷ்டி சண்டை, வெற்றி குறித்த அக்கரையின்மை, காங்கிரசிலேயே இருக்கும் சில தலைவர்களின் அதிமுகஆதரவு நிலை என அக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மழையில் நனைந்த பட்டாசு மாதிரி நமத்துப் போய்இருக்கிறது.
பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பதில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்களிடம் சூடு இருக்கிறது. பிரச்சாரத்தில்அதைப் பார்க்கவே முடியவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனைப் பார்த்தால் பலியாடு தான் நினைவுக்கு வருகிறது.
அதே நேரத்தில் அதிமுக புகுந்து விளையாடி வருகிறது. ஒரு டஜன் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,மாவட்டச் செயலாளர்கள், வட்ட, ஒன்றியத் தலைவர்கள் என சாத்தான்குளத்தை கலங்கடித்துக்கொண்டிருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
தினமும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அசைவ, சைவ உணவுகள் தடபுடலாகத் தயார் செய்யப்பட்டு பிரச்சாரத்தில்ஈடுபட்டுள்ளவர்களுக்கு உற்சாக கவனிப்புகள் நடக்கின்றன.
சுவர் விளம்பரம், பேனர்கள், கட்-அவுட்கள் என சாத்தான்குளத்தை ஆரம்பத்திலேயே ஆக்கிரமித்துவிட்டதுஅதிமுக. வேட்பாளர் நீலமேகவர்ணமும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அவரது பிரசாரத்துக்கு கிராமத்து மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. தெரிந்தமுகமாக இருப்பதால்ஓட்டுக்கேட்பதும் அவருக்கு மிக எளிதாக இருக்கிறது.
அதிமுகவுக்கு ஆதரவாக சாத்தான்குளம் பகுதி பா.ஜ.கவினரும் ஓட்டுவேட்டையில் இறங்கியுள்ளனர். இந்தத்தேர்தலை பா.ஜ.க. புறக்கணிப்பதாக அறிவித்தாலும் அதிமுகவை மறைமுகமாக ஆதரிக்குமாறு தொண்டர்களுக்குஉத்தரவு பறந்திருக்கிறது.
இந்துமுன்னணியினரும் பா.ஜ.கவினரும் சேர்ந்து கொண்டு காவிக் கொடிகளுடன் அதிமுகவுக்கு வாக்குசேகரித்து வருகின்றனர்.
பல இடங்களில் பா.ஜ.கவின் தாமரை சின்னத்துடன் நீலமேகவர்ணத்திற்கு ஓட்டு கேட்கும் போஸ்டர்களும்காணப்படுகின்றன.
வழக்கம் போல் சினிமாக்காரர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் ராதாரவி, தாமு,நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
தாமு மிமிக்ரி செய்தும் எம்.ஜி.ஆர். போல பேசியும் ஓட்டு கேட்டு வருகிறார். இவர்களைத் தவிரகுண்டுகல்யாணமும் கூட கொண்டு வரப்பட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை வாய்க்கு வந்தபடி விமர்ச்சித்துஓட்டு கேட்டு வருகிறார் இந்த பெரும் மனிதர்.
நாங்களும் விரைவில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவோம் என காங்கிரசார் கூறி வருகிறார்கள்.ஒருவேளை தேர்தல் முடிந்த பின் கூட்டி வருவார்களோ என்னவோ.
சாத்தான்குளம் தொகுதியில் அதிகம் உள்ள கிறிஸ்தவ நாடார் சமூகத்தினரை காங்கிரசுக்கு ஓட்டு போட வைக்க அச்சமூகத்தின் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தினால் மிகவும் அதிருப்தியுடன் உள்ள இச் சமூகத் தலைவர்கள்அதிமுகவுக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் இச் கிறிஸ்தவ நாடார் சமூக மக்களின் ஓட்டு நமக்குத்தான் என்ற பெரும் நம்பிக்கையில் இருக்கிறதுகாங்கிரஸ்.
காங்கிரசின் ஒரே நம்பிக்கையும் அது தான்.
-->