பாண்டிச்சேரி ஆளுனர் மல்கானி மரணம்: உடல் தகனம்- அத்வானி அஞ்சலி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுனர் கே.ஆர்.மல்கானி மாரடைப்பால் காலமானார். அவரதுஉடல் இன்று பாண்டிச்சேரியிலேயே முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
மரணச் செய்தி கேட்டு பெங்களூர், டெல்லியில் இருந்து அவரது மகன்கள், மகளும் நேற்றிரவே பாண்டிச்சேரிவந்து சேர்ந்தனர். உடலை அங்கேயே தகனம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த துணைப் பிரதமர் அத்வானி,ஹெலிகாப்டரில் பாண்டிச்சேரி வந்து மல்கானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று பிற்பகல் மல்கானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும்சிகிச்சை பலனளிக்காமல், இரவு 7.30 மணியளவில் மல்கானி மரணமடைந்தார்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மல்கானி மறைவுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக ஒரு வார கால அரசு முறை துக்கம் அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றுஅரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொது மக்களின் அஞ்சலிக்காக மல்கானியின் உடல் ஆளுனர் மாளிகையில்வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி,பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன் உள்படஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
மல்கானியின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல்தெரிவித்துள்ளனர்.
பின்னர் இன்று பிற்பகலில் கருவடிக்குப்பம் இடுகாட்டில் மல்கானியின் உடல் எரியூட்டப்பட்டது.
மறைந்த மல்கானிக்கு 82 வயதாகிறது. இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முன்னணி ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களில் ஒருவராக விளங்கிய மல்கானி, இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்டவர். சிறந்தஎழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர்.
1921ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் ஹைதராபாத் நகரில் பிறந்தமல்கானி பட்டப் படிப்பை முடித்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 1941ம் ஆண்டு சேர்ந்தார். அந்த அமைப்பில்தீவிரமாக ஈடுபட்டார்.
பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்தார். 1991ம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.1994ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதர்லேன்ட் என்ற நாளிதழின் ஆசிரியராகவும்,ஆர்கனைஸர் என்ற வாராந்திரியின் ஆசிரியராகவும் இருந்தார்.
இந்திய பத்திரிக்கை ஆசிரியர் சங்கத் தலைவராகவும் விளங்கியவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றமல்கானி 5 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
மக்களின் ஆளுனர் என்ற பெயரை புதுவை மக்களிடையே பெற்றவர் மல்கானி. யாராக இருந்தாலும் மல்கானியைஎளிதாக சந்திக்க முடிந்தது. மிகவும் எளிமையானவராக திகழ்ந்தார். குளிர்சாதன அறைகளிலேயே வாழ்ந்துபழக்கப்பட்ட ஆளுனர்களின் மத்தியில் இவர் வித்தியாசமானவராக திகழ்ந்தார்.
ஆளுனராகப் பதவியேற்றவுடன், ஆளுனர் மாளிகையான ராஜ் நிவாஸில் இருந்த குளிர்சாதன கருவிகள்அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டவர் மல்கானி.
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது துணை நிலை ஆளுனராக கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி அவர்பதவியேற்றார்.