நகர்ந்தது புயல் சின்னம்: இருப்பினும் தமிழகத்தில் மழை தொடர்கிறது
சென்னை:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலானபகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் நீடிக்கும் என வானிலைஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
இதனால் டெல்டா விவசாயிகளும், குடிநீருக்காக சிரமத்தில் இருந்த பொது மக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் இப்போது கேரளாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில்இன்று முழுவதும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாண்டிச்சேரியில்தான் அதிகபட்சமாக 163.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தஞ்சாவூரில் 160 மி.மீட்டர்மழை பதிவாகியுள்ளது. கீரனூரில் 158 மி.மீ, கடலூரில் 148 மி.மீ, வேலூரில் 125 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இதேபோல திருச்சி, வாலாஜாபாத், அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர், செங்கல்பட்டு,திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், பூண்டி, ஒசூர், திருவைய்யாறு, நாமக்கல், அதிராமபட்டினம், சேலம் ஆகிய பகுதிகளிலும் நல்லமழை பெய்துள்ளது.
மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டம்தான் அதிக அளவு மழையைப் பெற்றுள்ளது. இங்கு கடந்த நான்கு நாட்களில் 808மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அனைகளுக்கும் நீர் வரத்து அதிகமாகியுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் கார் பருவ பயிரிடுதலை விவசாயிகள் சில வாரங்களில் தொடங்க முடியும் என்று குமரி மாவட்டஆட்சித் தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
இதேபோல, மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது அணைக்கு விாடிக்கு 840 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. மழை பெய்து வருவதால் அது பாதிஅளவாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா தவிர பாலாறு டெல்டா மற்றும் பல்வேறு பாசனப் பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
கடும் மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் அறுந்து கிடந்த மின் வயரில் காலை வைத்த பெண் பரிதாபமாகப்பலியானார்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மலை ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.