ஆந்திர சட்டசபை தேர்தலில் தோல்வி: நாயுடு ராஜினாமா- ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
ஹைதராபாத்:
ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஹை-டெக் முதல்வர் என்றுவர்ணிக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. சட்டமன்றம் கலைக்கப்பட்ட 6மாதத்தில் (வரும் 13ம் தேதிக்கு முன்னதாக) மீண்டும் சபை அமைக்கப்பட வேண்டும் என்பதால் அம் மாநிலசட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் இன்று நடந்தது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 185 இடங்களை காங்கிரஸ் பிடித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சியானதெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி 26 இடங்களில் வென்றுள்ளது.
தெலுங்கு தேசம் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவுக்குபெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. அக் கட்சி வெறும் 2 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.
ஆட்சி அமைக்க 147 இடங்கள் தேவை என்ற நிலையில் 185 இடங்களைப் பிடித்துள்ள காங்கிரஸ், தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதியின் ஆதரவு இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்க முடியும்.
ஆந்திராவில் காங்கிரசுக்கு புத்துயிர் அளித்து வெற்றிக்கு வழி வகுத்த அக் கட்சியின் மாநிலத் தலைவர்ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 192 இடங்களை வென்று ஆட்சியமைத்த தெலுங்கு தேசத்துக்கு, இம் முறைதெலுங்கானா, ராயலசீமா மற்றும் கடலோரப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக தோல்வி கிடைத்துள்ளது.
தெலுங்கானா பகுதி மக்கள் தனி மாநிலம் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்திபோராடி வரும் தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் அந்தக் கூட்டணிக்கு இப்பகுதியில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
மாநிலத்தைப் பிரிக்கக் கோரும் இந்தக் கூட்டணிக்கு எதிராக ராயலசீமா மற்றும் கடலோரப் பகுதி மக்கள்வாக்களிப்பர் என தெலுங்கு தேசமும் பாஜகவும் நினைத்தன. ஆனால், அங்கும் இந்தக் கட்சிகளுக்கு பெரும் அடிவிழுந்துள்ளது.
ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு இருந்த நிலையில், தன் மீது நக்சல்கள் நடத்திய கண்ணி வெடித்தாக்குதலால் ஏற்பட்ட, அனுதாப அலையைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர நாயுடு நினைத்தார். இதற்காகதேர்தலை முன் கூட்டியே நடத்துவதற்கு வசதியாக சட்டமன்றத்தைக் கலைத்தார்.
இவரது யோசனையால் தான் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கூட்டணியும் ஆட்சியைக் கலைத்துவிட்டுதேர்தலை 8 மாதங்களுக்கு முன்பாகவே நடத்தியது.
ஹைதராபாத், ஐ.டி தவிர மற்ற தொழில்களுக்கு நாயுடு முக்கியத்துவமும் தரவில்லை என்ற புகார் பரவலாகஉள்ளது.
குறிப்பாக கிராமங்களையும், விவசாயிகளையும் அவர் புறக்கணித்ததாகவும் அதன் பலனாகவே இந்த பெரும்தோல்விக்கு ஆளாகியிருக்கிறார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுமார் 9 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நாயுடு, தனது கட்சியின் தோல்வியையடுத்து இன்று கவர்னர் சுர்ஜித் சிங்பர்னாலாவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
ஆந்திராவின் நகரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாதோல்வியடைந்தார். அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் துரைசாமிநாயுடு, வாககுகளைப் பிரித்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு வித்திட்டார்.