இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் ஆகும் மத வழிபாடுகள்
நியூயார்க்:
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் போதுமான பாதிரியார்கள் இல்லாததால் மதப் பணிகள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி (அவுட்சோர்ஸ்) செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதன் விவரம்:
சிறப்பு வழிபாடுகள், குழந்தை பிறப்பு உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனைகள், மறைந்த உறவினர்களின் நினைவாக நடத்தப்படும் அஞ்சலிகள், உடல் நலம் தேற நடக்கும் சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மத நிகழ்ச்சிகள் இந்தியாவில், இந்திய பாதிரிமார்களை கொண்டு நடத்தப்படுகின்றன.
குறிப்பாக கேரளத்தில் உள்ள சர்ச்களில் வெளிநாட்டினருக்கான வழிபாட்டு நிகழ்ச்சிகள் பெருமளவில் நடக்கின்றன. அந்த வழிபாடுகள் மலையாள மொழியில் நடத்தப்படுகின்றன.
ரோமன் கத்தோலிக்க தலைமை திருச்சபையான வாடிகன் மூலமாகவும், பிஷப்கள் மூலமாகவும், கிருஸ்தவ மத அமைப்புகள் மூலமாகவும் இந்தப் மதப் பணிகள் கேரள மாநில தேவாலயங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.
பெரும்பாலான பணிகள் இ-மெயில்கள் மூலமாகவே அனுப்பப்படுகின்றன.
நினைவஞ்சலி, நன்றி செலுத்தும் பிரார்த்தனைகளுக்கு கேரள தேவாலயங்களில் ரூ. 40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கர்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளுக்கு 5 டாலர்கள் (சுமார் 225 ரூபாய்) வசூலிக்கப்படுகிறது.
மாதத்துக்கு 350 வெளிநாட்டு மத பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடப்பதாக கொச்சின் திருச்சபையின் பிஷப் செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். கேரளாவில் பாதிரியார்களுக்கு 45 டாலர்கள் வரை மாத ஊதியம் கிடைக்கிறது. இந்த வெளிநாட்டு வழிபாடுகளால் அவர்களின் ஊதியம் பெருமடங்கு அதிகரிப்பதாகவும் செபாஸ்டியன் கூறியுள்ளார்.
மேலும் பண விஷயத்தில் செழிப்பான சர்ச்கள், வளரும் நாடுகளில் உள்ள வசதி குறைந்த தேவாலயங்களுக்கு உதவுவதற்காகவே இந்த வழிபாட்டு அவுட்சோர்சிங்கை செய்கின்றன என்றார்.
வெளிநாடுகளில் இருந்து வழிபாடு நடத்த நிறைய கோரிக்கைகள் வருவதாக பெங்களூர் தர்மாராம் கல்லூரியின் தலைமை பாதிரியார் ஜேம்ஸ் நரிதூக்கி கூறியுள்ளார்.
இந்த மத வழிபாட்டு அவுட்சோர்சிங்கு பிரிட்டனில் எதிர்ப்பு கிளம்பிவிட்டது. பிரிட்டிஷ் தொழிலாளர் சங்கமான அமிக்கஸ், இந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளது.
ஆனால், இந்த வெளிநாட்டு மத வழிபாடுகள் காலங்காலமாக நடந்து வருவதாகவும் இது ஒன்றும் புதிதல்ல என்றும் கேரளாவின் முக்கிய பாதிரியார்களில் ஒருவரான வின்சென்ட் குண்டகுளம் தெரிவித்துள்ளார். இதை பணத்துக்காக யாரும் செய்வதில்லை என்றும், இதை சேவையாகவே செய்வதாகவும் கூறுகிறார்.