மன்மோகன் சிங் நாளை லண்டன் பயணம்
லண்டன்:
பிரதமர் மன்மோகன் சிங் நாளை இங்கிலாந்து செல்கிறார்.
அங்கு இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரைச் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கிறார். மேலும் சர்வதேச பிரச்சினைகள்,தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சட்ட விரோதமாக குடியேறும் இந்தியர்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
இரு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் வர்த்தக கமிட்டி ஒன்றை இரு தலைவர்களும் அறிமுகப்படுத்துகிறார்கள்.பின்பு இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கின்றனர்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இந்தியாவிற்கு இங்கிலாந்து தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா பயணம்:
இங்கிலாந்தில் ஒரு நாள் தங்கும் மன்மோகன் சிங், அதன்பின் அமெரிக்கா செல்கிறார். வரும் செவ்வாய்க் கிழமை காலை அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப் பேசுகிறார்.
பின்பு, வரும் 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். அங்கு பிரேசில்,ஜப்பான், ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தப் பயணத்தின்போது மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா மற்றும் பாதுகாப்புத் துறை ஆலோசகர் தீக்ஷித் ஆகியோரும் செல்கின்றனர்.