வள்ளலாரின் அமைதிக் கடை விரிப்போம்: ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் வள்ளலாரின் அமைதிக் கடை விரிப்போம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ராமலிங்கர் பணி மன்றமும் ஏவி.எம் அறக்கட்டளையும் கடந்த 39 ஆண்டுகளாக நடத்தி வரும் வள்ளலார்-மகாத்மா காந்தி விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் ராமதாஸ் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக சமரச சன்மார்க்கம் பேசியவர் வள்ளலார். ஆனால் பின்னர், கடை விரித்தேன்.. கொள்வாரில்லை, இதனால் கடையை கட்டிவிட்டேன் (மூடிவிட்டேன்) என்று வேதனைப்பட்டார்.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்களுக்கு மத வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது கருத்து மக்களை முழுமையாய் போய்ச் சேரவில்லை. இதனால் தான் தமிழகத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. எனவே, வள்ளலாரின் அமைதிக் கடையை மீண்டும் விரிப்போம்.
இன்று நம் இளைஞர்கள் சினிமா தியேட்டர், சாராயக் கடைகளில் தான் இருக்கின்றனர். அவர்களை மாற்ற வள்ளலாரின் கருத்துக்கள் நிச்சயம் உதவும்.
மதத்தைவிட மனிதனே சிறந்தவன். மனித நேயமே சிறந்தது. வள்ளலாரின் இந்தக் கருத்தை தமிழகம் அன்றே ஏற்றிருந்தால் இன்றைய அவதிகளே இருந்திருக்காது. வள்ளலாரின் சன்மார்க்க நிலையம் மதம் சார்ந்தது அல்ல.
இதனால் அதை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே தவறு. அதற்கு விதி விலக்கு தந்து தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் ஊரன் அடிகள், நா.மகாலிங்கம், பேராசிரியர் அமுதன், சிவப்பிரகாச சுவாமிகள், ஒளவை நடராசன், அறவாணன் ஆகிய அறிஞர்களும் ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் திருவருட்பா பேருரை நூல் வெளியிடப்பட்டது.