தமிழகத்தில் படித்தாலும் வேலை இல்லை: ராமதாஸ்
சென்னை:
படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்புக்களே இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்:
சென்னையில் நடந்த வேலைவாய்ப்புக் கண்காட்சியில் ஒரே நாளில் 57,000 இளைஞர்கள், இளைஞிகள் குவிந்து வேலைக்காக விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பி.இ. எம்.இ, எம்.எஸ்.சி, எம்.சி.ஏ. படித்தவர்கள்.
எதிர்காலக் கனவுடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நின்று காத்திருந்து பெயர்களை பதிவு செய்து, நேர்காணலில் பங்கெடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் சாராயக் கடைகளில் வேலை பார்க்க தமிழக அரசு பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்தது. தங்களது பிள்ளைகள் சாராயக் கடையை எட்டிப் பார்ப்பதே பாவம் என்றும் கருதுகின்ற பெற்றோர், படித்துவிட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் வேலையில்லாமல் சுற்றும் தங்களது பிள்ளைக்கு இந்த வேலையாவது கிடைத்தால் போதும் என்று நேர்காணலுக்கு அநுப்பி வைத்தனர்.
அப்போதும் மாவட்டம்தோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நின்றனர் வேலைக்காக.
இதிலிருந்து என்ன தெரிகிறது. தமிழகத்தில் படித்தவர்கள் யாருக்கும் வேலை வாய்ப்பே இல்லை. இது தான் தமிழகத்தின் நிலை. வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிட்டது.
அரசும் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டது. வேலைக்கு ஆள் எடுக்கும் துறையின் அலுவலர்களுக்கு வேலை இல்லை. அரசுத் துறையில் சுமார் 20,000 காலியிடங்களை காலியாகவே வைத்திருக்கிறது அதிமுக அரசு.
இந்த 20,000 பேரையாவது வேலைக்கு சேர்ந்திருந்தால் அந்த இளைஞர்களின் குடும்பத்திலாவது ஒளி பிறந்திருக்கும்.
காமராஜர் ஆலயம் கட்டவில்லை, ஆலைகளை துவக்கினார். சகுனம் பார்த்ததில்லை, சாலைகள் அமைத்தார். சாஸ்திரம் பார்க்கவில்லை கல்விச் சாலைகள் அமைத்தார்.
இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது?. டைடல் பார்க்-2ம் கட்டப் பணிகள் இதோ வருகிறது.. இதோ வருகிறது என்று 3 வருடமாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கல் கூட அசையவில்லை.
வேலை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட்டு நிதி நிலையை சீர்படுத்திவிட்டதாய் தம்பட்டம் அடிக்கிறார்கள். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்காாமல் அது என்ன நிதி சீர்திருத்தமோ? இந்த ஆட்சியில் எதுவும் புரியவில்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications