வீரப்பனுடன் தொடர்புபடுத்த சதி: ராமதாஸ் புகார்
கோவை & பெங்களூர்:
சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் பாமகவை தொடர்புபடுத்த ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் தலைமையில் சதிநடப்பதாக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கேவைையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வீரப்பனின் கூட்டாளி சேதுமணியின் கையில் பாமகவின் மாம்பழ சின்னத்தை வரைந்தும், வீரப்பன் புதைக்கப்பட்டஇடத்தில் பாமக கொடியை ஏற்றியும், வீரப்பனுக்கும் பாமகவிற்கும் தொடர்பு இருப்பதுபோன்ற தோற்றத்தைஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.
தமிழக காவல்துறையின் ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸார் தான் இந்த செயல்களின் பின்னணியில் இருக்கின்றனர்.பாமகவை வீரப்பனுடன் இணைத்துப் பேச வைப்பதற்காக அவர்கள் ஓவர்டைம் வேலை பார்க்கின்றனர்.
வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவனது மனைவி முத்துலட்சுமி, உண்மை கண்டறியும் குழுவினர்மற்றும் அதிரடிப்படையினர் என ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். இதுவரைஉண்மையான தகவல்கள் எதுவும் வரவில்லை. எனவே இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் பாதயாத்திரை மேற்கொள்வது அரசு விதிகளுக்கு உட்பட்டதுதானாஎன்பதை தலைமைச் செயலாளரும், டி.ஜி.பியும் விளக்க வேண்டும்.
பாதயாத்திரை போகும் முடிவை விஜயக்குமார் கைவிட வேண்டும். இல்லையென்றால் இது தவறானமுன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் லட்சணம் எவ்வாறுஉள்ளது என்பதை இது காட்டுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து தனது நிலைப்பாட்டைசொல்லாத ஒரே கட்சி அதிமுகதான்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை நியமனத்திற்கு தடை உள்ளது. இதை நீக்காவிட்டால் இளைஞர்களைத்திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தேர்தலில் நிற்க விரும்பினால் பாமக சார்பில் இடம் ஒதுக்குவீர்களா என்றுகேள்விக்கு ராமதாஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதன்பின்பு, ரஜினியின் மகள் திருமணத்திற்கு அழைப்புவந்தால் போவீர்களா என்ற கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்த பெரிய கும்பிடு போட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்.
வீரப்பனின் டைரி:
இதற்கிடையே வீரப்பன் கொல்லப்பட்டபோது அவனது டைரி தமிழக அதிரடிப் படையினரால்கைப்பற்றப்பட்டதை கர்நாடக அதிரடிப்படை தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பனின் டைரி தற்போது தர்மபுரி போலீஸார் வசம் உள்ளது. வீரப்பன் கொல்லபட்டதோடு அதிரடிப்படையின்வேலை முடிந்தது. அவன் தொடர்பான வழக்குகளை தர்மபுரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்தடைரியில் என்ன எழுதப்பட்டிருந்தது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், அதன் மூலம் பல விவரங்கள்வெளியில் வர வாய்ப்புள்ளது.
வீரப்பன் கொல்லப்பட்டதன் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடக காவல்துறை மீது படிந்திருந்த கறைதுடைக்கப்பட்டது என்றார்.
வீரப்பன் டைரியில் பண விவகாரங்கள், ஆயுதம் வாங்கியது, பல பிரமுகர்களின் தொலைபேசி எண்கள்உள்ளதாகத் தெரிகிறது.