இலங்கையில் 5,880 பேர் பலி-வட கிழக்கில் கடும் பாதிப்பு
கொழும்பு:
கடல் கொந்தளிப்பால் இலங்கையில் 5,880 பேர் வரை பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வட-கிழக்குப் பகுதிகளைச்சேர்ந்த தமிழர்களாவர்.
முல்லைத் தீவு, வடமராச்சி ஆகிய பகுதிகள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் 1,500 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் தமிழர்கள் வசிக்கும் பெரும்பாலான வட கிழக்குப் பகுதிகள் கடும் வெள்ளச் சீற்றத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டுள்ளன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும்பொதுமக்கள் 5,017 பேரும், 43 ராணுவத்தினரும் பலியாகிவிட்டதாக இலங்கை காவல்துறை தலைவர் சந்த்ரா பெர்னாண்டோகூறியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் நடத்தப்பட்டு வந்த குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த சுமார் 170 குழந்தைகள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டனர். மட்டக்களப்பு கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் மிதக்கின்றன.
மேலும் கொழும்பு நகரிலும் பல இடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. மத்தாரை மாவட்டத்தில் பல குழந்தைகளும் வயதானவர்களும் கடல்நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். திரிகோணமலையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரிகோணமலையில் மட்டும் 500 பேர்வரை பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி மருத்துவமனையில் உடல்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
வன்னி பகுதியில் விடுதலைப் புலிகளின் படைகள் சுமார் 820 பொது மக்களின் உடல்களை மீட்டுள்ளன.
எங்கள் பகுதி மக்கள் சந்தித்துள்ள மிகப் பெரிய இயற்கைச் சீற்றம் இது தான் என புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்கூறியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த 70 வெளிநாட்டுப் பயணிகளும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து லண்டனில் ஓய்வில் இருந்து அதிபர் சந்திரிகா உடனடியாக நாடு திரும்புகிறார்.
இந்த பெரும் இயற்கையழிவை அடுத்து, இலங்கைக்கு நிவாரண நிதி அளிக்குமாறு சர்வதேச நாடுகளை இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் அமைப்பும் கேட்டுக் கொண்டன.












Click it and Unblock the Notifications