கோத்ரா சம்பவம் ஒரு விபத்து தான: கமிஷன் அறிக்கை
டெல்லி:
குஜராத் மாநிலம் கோத்ராவில் 59 ராம பக்தர்கள் பலியாகக் காரணமாக இருந்த ரயிலில் தீப்பிடித்த சம்பவம் ஒரு விபத்து தான் என்றும்,யாரும் ரயிலுக்கு வேண்டுமென்றே தீ வைக்கவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடத்திய கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
2000ம் ஆண்டில் அயோத்திக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ராம பக்தர்கள் வந்த ரயிலில் கோத்ரா ரயில் நிலையத்தில் தீப் பிடித்துக்கொண்டது. இதில் பல பெண்கள் உள்பட 59 ராம பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ரயிலுக்கு முஸ்லீம்கள் தீ வைத்ததாகக் கூறி குஜராத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்கொல்லப்பட்டனர். பல இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குடும்பம் குடும்பமாக சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டனர்.இந்த வன்முறையில் அப்பாவி இந்துக்கள் பலரும் கூட கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறையைத் தடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், அதை மறைமுகமாகத் தூண்டிவிட்டதாக குஜராத் பாஜக முதல்வர் நரேந்திரமோடி மீது கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அவரை மத்திய பா.ஜ.க. அரசு முழுமையாக ஆதரித்தது.
இந்தத் தீ விபத்து குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பானர்ஜி கமிட்டி இன்று ரயில்வே வாரியத் தலைவர் ஆர்.கே. சிங்கிடம் தனதுஇடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டியின் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்படவில்லை. வேதியியல் சோதனைகளில் இதுஉறுதியாகிவிட்டது. மேலும் அந்தப் பெட்டிக்கு வெளியில் இருந்து யாரும் தீ வைக்கவும் இல்லை.
அந்தப் பெட்டியில் 90 சதவீத ராம பக்தர்களிடம் திரிசூலங்கள் இருந்தன. (சங் பரிவார் அமைப்புகள் சொல்வது போல) வெளியில் இருந்துபெட்டியில் ஏறிய நபர் பெட்ரோலை ஊற்றித் தீ வைக்கும் வரை ராம பக்தர்கள் சும்மா இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் அதைத்தடுத்திருப்பார்கள்.
எரிக்கப்பட்ட ரயில் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாக்க ரயில்வேத்துறை தவறிவிட்டது. இந்த எஸ்-6 பெட்டியோடு எரிக்கப்பட்டஎஸ்-7 பெட்டியையும் கோத்ராவிலேயே ஆவணமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெட்டி அங்கிருந்துஅகற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் (பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது) வரக் கூட இல்லை.
தீ விபத்து ஏற்பட்டவுடன் குஜராத் தீயணைப்புப் படை நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மிகத் தாமதமாகத் தான் கோத்ரா ரயில்நிலையத்துக்கு தீயணைப்புப் படையினர் வந்தனர். அவர்களது தீ வண்டிகளில் இருந்த பம்புகள் செயல்படவில்லை.
இதனால் 5 நிமிடத்தில் அணைக்கப்பட்டிருக்க வேண்டிய தீ நெடுநேரம் எரிந்து அப்பாவிகளை உயிரைப் பறித்துவிட்டது. இந்தத் தீவிபத்தே முழுக்க முழுக்க ஒரு விபத்து தான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இந்த உயர் மட்டக் கமிட்டி விசாரணைக்குஆணையிட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.
பா.ஜ.க. கடும் எதிர்ப்பு:
நீதிபதி பானர்ஜி கமிட்டியின் இந்த இடைக்கால அறிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி நிருபர்களிடம் பேசுகையில்,
கோத்ரா வழக்கை திசை திருப்பவே இந்த இடைக்கால அறிக்கையை கமிஷன் தாக்கல் செய்துள்ளது. பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலைமனதில் கொண்டே இந்த அறிக்கையை இந்த நேரத்தில் தாக்கல் செய்ய வைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் லாலு.
தவறு செய்தவர்களைக் காப்பாற்றும் வகையில் தான் இந்த இடைக்கால அறிக்கை உள்ளது என்றார்.
பா.ஜ.க. மீது லாலு கடும் தாக்கு:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ்,
கோத்ரா ரயில் தீ விபத்துக்குப் பின் பா.ஜ.க., சங் பரிவார் அமைப்புகள் குஜராத்தில் காட்டுத்தனமான வன்முறையை நடத்தின. நரேந்திரமோடியே இந்த வன்முறையை நேரடியாக நடத்தினார்.
இந்த ரயில் விபத்து விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைக்க முயன்ற முன்னாள் ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் உள்பட அனைவர் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். (பிகாரில் லாலுவுக்கு நிதிஷ்தான் நேரடி அரசியல் எதிரி என்பது குறிப்பிடத்தக்கது).
சிறுபான்மையினர் மனதில் பயத்தைப் பரப்பி நாட்டைத் துண்டாட பா.ஜ.கவும் சங் பரிவார் அமைப்புகளும் முயல்கின்றன என்றார்.












Click it and Unblock the Notifications