நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணிக்க ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாஉரை நிகழ்த்துகிறார். தமிழக ஆளுனராக 2வது முறையாக பதவியேற்றிருக்கும் பர்னாலா, முதன்முறையாக நாளை சட்டசபையில்உரையாற்றுகிறார்.
நாளை மறுநாள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எஸ். திருநாவுக்கரசு மற்றும் சுதர்ஸனம் ஆகியோரின் மறைவுக்கும், சுனாமியால்இறந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்படும்.
வரும் 2ம் தேதி ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.
இந்தக் கூட்டத் தொடரில் சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து பிரச்சினையைக் கிளப்பப் போவதாக திமுககூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல் புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் தொடர்பாகவும் பிரச்சினையைக் கிளப்பவும்திட்டமிட்டுள்ளன.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து பாஜக கேள்வி எழுப்பும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா பதவியேற்றது முதல் ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆளுனர் உரைதமிழில் வாசிக்கப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புச் செய்தன. இந் நிலையில் இந்த ஆண்டும் ஆளுநர்உரை தமிழில் வாசிக்கப்படாது என்று சபாநாயகர் காளிமுத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.