அதிமுகவுக்கு கொள்கையும் கத்திரிக்காயும் இல்லை: ராமதாஸ்
திண்டிவனம்:
அதிமுகவுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சிகள் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் தரம் தாழ்ந்த தாக்குதலைத் தொடுத்திருக்கிறார். போராட்டத்துக்காக போராட்டம் நடத்துகிற பொறுப்பற்றவர்கள் என்று பாமகவினரைத் தாக்கியிருக்கிறார்.
கல்வி கட்டண கொள்கை, இட ஒதுக்கீடு, காவிரிப் பிரச்சினை, கிராமப்புற மதுக்கடைகளை மூடுதல் மற்றும் தமிழக்காக பாமக போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இவற்றில் எதை ஜெயலலிதா தீர்த்து வைத்திருக்கிறார்?
போராட்டத்திற்காக போராட்டம் நடத்தும்படி தனது கட்சிக்காரர்களை தூண்டி விடுவது அவர்தான். மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு சுட்டிக் காட்டியும், போராட்டம் நடத்தும்படி அதிமுகவினரைத் தூண்டி விட்டார். இவர் எங்களைக் குறை சொல்வது விந்தையாக இருக்கிறது.
வீரப்பனைக் கொன்றவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்காமல் யார், யாரோக்கு விருது வழங்கியிருப்பதாக ஜெயலலிதா பேசியிருக்கிறார். தேசிய விருது பெற்றவர்கள் யார், யாரோவா?. ஜெயலலிதா தனது பதவிக்குரிய கெளவரத்தைக் கூட மறந்து பேசியிருக்கிறார்.
வீரப்பன் கொலையில் அவரது மனைவி முத்துலட்சுமி சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். இத்தகைய நிலையில் அதிரடிப் படையினருக்கு எப்படி மத்திய அரசு விருது தர முடியும்?
சுனாமி நிவாரணத்துக்கு வந்த ராணுவத்தினர் மீது ஜெயலலிதா வீண் பழி சுமத்தியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சியில் இருப்பவர்கள்தான் வாக்காளர் பட்டியலைத் தயாரித்தார்கள், தேர்தல் நடத்தினார்கள் என்பதை மறந்து விட்டு, 39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பேசுகிறார். தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் அதை ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருக்கலாமே?
அதிமுகவுக்கு கொள்கையோ, கோட்பாடோ எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார் ஜெயலலிதா. இன்று பேசியதை நாளை மறந்து விடுவார்ா. கேட்டால் அண்ணா யுகம் என்பார்கள். அதிமுகவுக்கு கொள்கையும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை என்றார் ராமதாஸ்.