போலீஸ் காவலில் காணாமல் போன 3 பெண்கள்
சென்னை:
போலீஸ் காவலில் இருந்த 3 பெண்கள் காணமல் போயுள்ளனர். அவர்களை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னைப் புறநகர்ப் பகுதியான மாங்காடு அருகே உள்ள பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற 50 வயதுப்பெண்மணி தாக்கல் செய்துள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
பிப்ரவரி 11ம் தேதி 7 போலீஸார் எங்களது வீட்டுக்கு நள்ளிரவில் வந்து என்னையும், எனது மகள் அருள் மொழி (வயது 25), உறவினர்வடிவாம்பாள் (50), அவரது மகள் லட்சுமி (27), அருள் மொழியின் 12, 10 வயதான இரு மகள்கள் ஆகியோரை போலீஸார் அழைத்துச்சென்றனர்.
அந்த போலீஸாரில் 6 பேர் ஆந்திர மாநிலம் பிச்சாலூர் கிராம காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு பெண் போலீஸ், பூந்தமல்லிஅனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்.
விசாரணைக்காக எங்களை அழைத்துச் செல்வதாக கூறிய போலீஸார் என்ன காரணத்திற்காக எங்களை விசாரிக்க அழைக்கிறீர்கள் என்றுகேட்டபோது பதில் கூறவில்லை. கட்டாயப்படுத்தி எங்களை நள்ளிரவில் பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பிச்சாலூரில் உள்ள எங்களது உறவினர்கள் சிலரைக் குறித்து அவர்கள் கேள்வி கேட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர்என்னையும், எனது இரு பேத்திகளையும் மட்டும் விடுவித்த போலீஸார் மற்ற 3 பேரையும் காலையில் விடுவிப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் போலீஸார் சொன்னபடி அவர்கள் காலையில் வரவில்லை. இதையடுத்து 7 மணிக்கு போலீஸ் நிலையம் சென்று விசாரித்தேன்.ஆனால் போலீஸார் சரியான பதிலைத் தரவில்லை. இதையடுத்து எனது உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பிச்சாலூர் காவல்நிலையம் சென்று விசாத்தேன்.
அங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. சித்தூர் பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் எங்களை விசாரணைசெய்ததாக அங்கு தான் அறிந்து கொண்டேன். இதையடுத்து மீண்டும் மாங்காடு வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
ஆனால் போலீஸார் அதை வாங்க மறுத்து விட்டனர்.
பிப்ரவரி 19ம் தேதி செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைம், மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு தந்திகள் மூலம் புகார்அனுப்பினேன். இதுவரை எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பெண்களும் என்ன ஆனார்கள், எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைநீதிமன்றம் தான் மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் ராஜம்மாள் கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் விசாரித்தனர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒருவாரத்தில் பதிலளிக்கக் கூறி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.