ஜெயகாந்தனுக்கு கிடைத்த காலம் தாழ்ந்த மரியாதை!
சென்னை:
ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் என்ற பெருமை ஜெயகாந்தனுக்குக் கிடைத்தாலும், இந்த விருது அவருக்கு மிகவும் காலம்தாழ்ந்து கிடைத்துள்ளது என்ற வருத்தம் இலக்கியவாதிகள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
சிறுகதை இலக்கியத்தில் மிகப் பெரும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதைகளில் சாதித்தவர்ஜெயகாந்தன். அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் கடலூர் அருகே உள்ள மஞ்சக்குப்பத்தில் 1934ம் ஆண்டு ஏப்ரல் 24ம்தேதி பிறந்தவர் ஜெயகாந்தன். 1946ல் சென்னைக்கு வந்த அவர் அடுத்த ஆண்டே கம்யூனிஸ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுகம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
அவரது முதல் சிறுகதை 1950ம் ஆண்டு செளபாக்யம் என்ற இதழில் பிரசுரமானது. 1956ல் திருமணம் செய்து கொண்டார். 1957ல்அவரது முதல் நாவலான "வாழ்க்கை அழைக்கிறது பிரசுரமானது. 58ல் "ஒரு பிடி சோறு என்ற சிறுகதைத் தொகுப்பைவெளியிட்டார் ஜெயகாந்தன். 60ல் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "இனிப்பும் கசப்பும் வெளியானது.
அவர் எழுதிய "உன்னைப் போல் ஒருவன் நாவல், திரைப்படமாகி குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸக் கட்சியின் கொள்கையில் முரண்பாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து விலகினார். 1967ல் ஜெயபேரிகைதினசரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 69ல் ஞானரதம் இலக்கிய இதழின் ஆசிரியரானார்.
1972ல் அருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அவர் எழுதிய "சில நேரங்களில் சில மனிதர்கள், இந்த விருதை பெற்றுக்கொடுத்தது. எழுத்துலகில் கோலோச்சி வந்த ஜெயகாந்தன், 1977ல் அரசியல் களத்திலும் குதித்தார். தி.நகர் தொகுதி சட்டசசைபத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவரது எழுத்துக்குக் கிடைத்த ஆதரவு, அவருக்கு தேர்தலில் கிடைக்காததால்தோல்வியைத் தழுவினார்.
1978ல் அவர் எழுதிய "இமயத்திற்கு அப்பால் என்ற நூலுக்கு சோவியத் நாட்டின் நேரு விருது கிடைத்தது. 1979ல் கல்பனாஇதழின் ஆசிரியரானார். "கருணை உள்ளம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் தமிழகஅரசின் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளைப் பெற்றது.
கடல் கடந்தும் ஜெயகாந்தனுக்கு மரியாதை கிடைத்தது. சோவியத் நாட்டின் அழைப்பின் பேரில் 1980, 83, 84 ஆகியஆண்டுகளில் அவர் ரஷியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1986ல் "ஜய ஜய சங்கரா நாவலுக்கு தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு கிடைத்தது. அதேபோல, "சுந்தரகாண்டம்நாவலுக்கு ராஜ ராஜன் விருது கிடைத்தது.
1994ல் மணி விழா கண்ட ஜெயகாந்தன் இதுவரை 40க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். 200க்கும் மேற்பட்டசிறுகதைகளைத் தீட்டியுள்ளார். 15க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரதுபல நாவல்கள் திரைப்படமாகி வெற்றி பெற்றுள்ளன.
"ஒரு பிடி சோறு, "சினிமாவுக்குப் போன சித்தாளு, "சில நேரங்களில் சில மனிதர்கள், "இனிப்பும், கசப்பும், "உண்மை சுடும்,"குருபீடம், "யாருக்காக அழுதான், "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், "பாவம் இவள் ஒரு பாப்பாத்தி, "ஊருக்கு நூறு பேர், "ஜயஜய சங்கரா, "ஈஸ்வர அல்லா தேரே நாம் என இவரது படைப்புகள் அனைத்துமே அதிகம் பேசப்பட்டவை, பிரபலமானவை.
கம்யூனிஸவாதியாக ஆரம்பத்தில் இருந்த ஜெயகாந்தன் பின்னர் காங்கிரஸ்காரர் ஆனார். காங்கிரஸிலும் அவருக்குஊடல்ஏற்பட்டு பின்னர் அரசியலையே கொஞ்ச காலத்திற்குக் கைவிட்டார். சமீபத்தில் ஜெயேந்திரருக்கு ஆதரவாக இவர் எழுதிய நாவல்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எத்தனை அவதராம் எடுத்தாலும், எச் சார்பு நிலை கொண்டிருந்தாலும், ஜெயகாந்தனின் எழுத்தில் ஆரம்பம் முதலே காணப்படும்வீச்சு இன்னும் குறைந்தபாடில்லை. ஒருமுறை சுந்தரராமசாமி கூறினார், நாமெல்லாம் என்னதான் எழுதினாலும் அது குறைந்தகால பரபரப்பையே ஏற்படுத்துகிறது. ஆனால் ஜெயகாந்தனுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு இலக்கிய பேராதரவு காணப்படுகிறதுஎன்று வியந்தாராம்.
வாழ வழியில்லாதவர்கள், வறுமையின் கொடுமையில் இருப்பவர்கள், சாலையோரத்தில் வாழ்ந்து மடிந்தவர்கள் குறித்து அதிகம்எழுதியவர் தமிழில் புதுமைப்பித்தன் மட்டும்தான். அவருக்கு அடுத்து அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ஜெயகாந்தன்.அவரது கதைகளில் வாழ்க்கையில் அடிபட்டவர்கள், வறுமையில் சிக்கித் தவிப்பவர்களுக்கான ஒரு பரிதவிப்பு, ஒரு ஆதங்கம்இருக்கும்.
குடிசைவாசிகளின் வாழ்க்கை முறையை தனது பல கதைகள் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி அவர்களுக்கு விடியல் தேடித் தரமுனைந்தவர் ஜெயகாந்தன். அவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்களாகவே இருப்பார்கள். நடுத்தரத் தட்டுமக்களின் தடுமாற்றங்கள், குழப்பங்கள், பிரச்சினைகளை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியவர் ஜெயகாந்தன்.
அதேபோல, பெண் சுதந்திரத்தை வலியுறுத்தியும் அவர் பல கதைகளை, கட்டுரைகளை, நாவல்களை எழுதியுள்ளார். ஆண்களைப்போலவே பெண்களுக்கும் செக்ஸில் சுதந்திரம் வேண்டும் என்று ஆணித்தரமாக கூறியவர் ஜெயகாந்தன்.பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும், ஆணாதிக்க மனோபாவத்தை சாடியும் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியவர்ஜெயகாந்தன்.
ஆச்சரியப்படும் விதமாக பிராமணர்களுக்கு ஆதரவாகவும் பல கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பலருக்குப்பிடிக்காமல் போனாலும் கூட பிராமணர்கள் பக்கம் உள்ள நியாயங்களை வெளிக்கொணர்ந்தவர் ஜெயகாந்தன்.
தனது எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மட்டுமல்லாமல் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பல சீர்கேடுகளையும்வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயகாந்தன் சமீப காலமாக எழுதுவதை விட்டு விட்டார். மற்றவர்களின் எழுத்துக்களையும் அவர்அதிகம் படிப்பதில்லை.
இருப்பினும் அவரையும் கவர்ந்த இளைய சமுதாய எழுத்தாளர்கள் நிறையப் பேர் உண்டு. அப்படிப்பட்டவர்களில்ஜெயமோகனும் ஒருவர். ஜெயமோகனின் எழுத்துக்களை அவர் பாராட்டியது உண்டு. தலைமுறை கடந்தும், இன்னும் தமிழ்இலக்கிய உலகில் பீஷ்மராக, பிதாமகராக விளங்கும் ஜெயகாந்தனுக்கு, ஞானபீடம் தாமதமாக வந்தாலும், இப்போதுகிடைத்திருப்பதன் மூலம் அந்த விருதுக்கும் பெருமை கிடைத்துள்ளது.
சக தமிழர்களோடு இணைந்து தட்ஸ்தமிழ்.காம் ஜெயகாந்தனை வாழ்த்திப் பெருமை அடைகிறது.












Click it and Unblock the Notifications