என் கணவர் உயிருக்கு ஆபத்து: கராத்தே மனைவி கண்ணீர் பேட்டி
சென்னை:
என் கணவரின் உயிருக்கும் என் உயிருக்கும் என் இரு குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என கராத்தேதியாகராஜனின் மனைவி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தனது வீட்டில் நிருபர்களை சந்தித்த கராத்தேவின் மனைவி ஜோதி கூறியதாவது:
எங்களைச் சுற்றி ஏதேதோ நடக்கிறது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் கணவர் தலைமறைவாகிவிட்டார் என்றும்அவரை போலீஸ் தேடுகிறது என்றும் தினமும் செய்திகள் வருகின்றன. என் கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் மீது எந்தவழக்கும் இல்லை.
அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது பெரியப்பா மகனான கங்காதரன் என் குடும்பத்தை மிரட்டுகிறார். போலீஸ்துணையுடன் இந்த வீட்டை கைப்பற்ற முயற்சி செய்கிறார்.
அரசியல் தொடர்பான விஷயங்களை என் கணவர் என்னிடம் பேசியகில்லை. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருவாரமாக வீட்டுக்கு வரவில்லை. சாமி கும்பிட வெளியூர் போயுள்ளார் என்றே நினைக்கிறேன்.
அவ்வப்போது தொலைபேசியில் பேசுகிறார். தைரியமாக இரு என்று கூறுகிறார். அவரும் தைரியமாகத்தான் உள்ளார். எங்கும்ஓடிப் போய்விடவில்லை. இதே இடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார். எந்த நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்வார்.
இதுவரை என் வீட்டுக்கு போலீஸ் வரவில்லை. ஆனால், வெளியில் உலாவும் செய்திகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. என்கணவரின் உயிருக்கும் என் உயிருக்கும் என் இரு குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் எங்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ பாதுகாப்பு தர வேண்டும். என் கணவர் பகிரங்கமாக வெளியில் வந்தால்கைது செய்யும் நிலை உள்ளது.
துணை மேயரான எனது கணவருக்கும் எங்களுக்குமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டும். அதிமுகவினர் பற்றி சிறியதாக செய்தி வந்தாலே அதற்கு தலைமைக் கழகம் மூலம் விளக்கம் தருவார் முதல்வர்.
அதே போல இந்த விஷயத்திலும் ஜெயலலிதா விளக்கம் தர வேண்டும். எங்கள் கவலையைப் போக்கி எனது கணவர் மற்றும்எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றார் ஜோதி அழுதபடியே.
உடனிருந்த வழக்கறிஞர் சந்திரசேகர் கூறுகையில்,
அதிமுகவில் கராத்தேவின் வளர்ச்சியை சகிக்க முடியாத சிலர் அவரைப் பற்றி மேலிடத்தில் தவறாக ஏதேதோ புகார்களைகூறியுள்ளனர். உண்மையை முதல்வர் தெரிந்து கொண்டால் தனக்கும் முதல்வருக்கும் இடையிலான பிரச்சனை சரியாகிவிடும் எனகராத்தே நம்புகிறார் என்றார்.
பெண்களிடம் போலீஸ் தொல்லை:
இதற்கிடையே கராத்தேவின் நண்பரான நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் தலைமறைவாகியுள்ளார். இந் நிலையில் அவரது மனைவிகவிதா இன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
மெரீனா போலீசார் நள்ளிரவில் என் வீட்டுக்கு வந்து டார்ச்சர் செய்கிறார்கள். என் கணவரை கராத்தே விவகாரத்தில் தொடர்புபடுத்தமுயல்கிறார்கள். பெண்கள் தனியாக இருக்கும்போது வீட்டுக்கு வந்து போலீசார் தொல்லை தருகிறார்கள். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.