எம்ஜிஆர் பல்கலை. இடிப்பு துவங்கியது: கலாம் பெயரில் ஆக்கிரமிப்பு கட்டிடம்!
சென்னை:
கூவம் ஆற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில், குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் பெயரில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர்.
சென்னை மதுரவாயலில், கூவம் ஆற்றில் 6.5 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமித்து, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்கம், தனதுஎம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் பல கட்டிடங்களைக் கட்டியுள்ளார். இவரைப் போல பல கல்லூரிகளும்ஆக்கிரமிப்பு நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளன.இந் நிலையில் கூவத்தை தூர் வாரும் வகையில் பல்கலைக்கழக கட்டிடங்களை இடித்துத் தள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட.இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர். அதன்படி, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்பெயரில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி, மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியின் ஒரு பகுதி, பாலிடெக்னிக்கல்லூரியின் ஒரு பகுதி, சோதனைக் கூடத்தின் ஒரு பகுதி ஆகியவை இடிக்கப்படவுள்ளன.
இதில் அப்துல் கலாம் பெயரில் அமைந்துள்ள கட்டிடத்தை புல்டோசர் கொண்டு பொதுப் பணித்துறை ஊழியர்கள் இடித்துத்தள்ளியபோது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், கல்லூரி நிர்வாகத்தை கோபத்துடன் தூற்றினர்.
அப்துல் கலாம் பெயரை வைத்துக் கொண்டு இப்படி அப்பட்டமாக விதிகளை மீறி கட்டிடத்தைக் கட்டிய நிர்வாகிகளை கைதுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோபமாக தெரிவித்தனர். ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணி வேகமாக நடந்துவருவதாகவும், எப்படியும் 20 நாட்களாகி விடும் என்றும் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அதிகாரி அமுதவல்லிதெரிவித்துள்ளார்.
இரவுபகலாக ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை ஊழியர்கள் இடித்து வருகின்றனர். கட்டிடங்கள் மிகவும் உறுதியாககட்டப்பட்டிருப்பதால் உடைப்பு வேலை மெதுவாக நடந்து வருகிறது. புல்டோசர்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு படுசுறுசுறுப்பாக இடித்துத் தள்ளி வருகின்றன.
முன்னதாக இந்தக் கட்டடங்களை வெடி வைத்து ஒரே போடு போட்டு தகர்க்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கானநிபுணர்களைக் கொண்டு வர கால தாமதம் ஆகும் என்பதால் புல்டோசர்களுடன் களத்தில் இறங்கிவிட்டது மாவட்ட நிர்வாகம்.
எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் இப்போது இடிக்கப்பட்டு வரும் கட்டிடங்களின் நில மதிப்பு ரூ. 15 கோடியாகும். ஆனால்கட்டிடங்களின் மதிப்பு ரூ. 40 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கூவம் ஆறு முழுவதும் உள்ளஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற அரசு முடிவு செய்துள்ளது.
தீவுத் திடலில் கடலில் கலக்கும் இடம் வரை உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை முழுமையாகஅகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தப் பணி தொடங்கும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஒய்யாரமாக சென்னை நகருக்குள் ஓடிக் கொண்டிருந்த கூவம் இப்போது நாறிப் போயும், குறுகிப் போயும் உள்ளது.இதை சரி செய்து கூவத்தை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பொதுமக்களும் விரும்புகின்றனர்.