சுனாமி நினைவலைகள்: கண்ணீரில் கரைந்த தமிழகம்
சென்னை:
இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை சுனாமி தாக்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சோக நினைவுகளின் தாக்குதலால், கண்ணீரில்மூழ்கிப் போயின.சுமார் 2,27,000 லட்சம் பேரின் உயிரை சில நொடிகளில் காவு வாங்கிய சுனாமியில் காணாமல் போனவர்கள் மட்டும் சுமார்50,000 பேர். இவர்களும் பலியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்தோனேஷியாவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட மிக பயங்கரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவுகோளில்9.3 என பதிவானது, ஏற்பட்ட சுனாமி அலைகள் ஏற்படுத்திய பயங்கர சேதமும் உயிரிழப்பும் ஈடு செய்ய இயலாதது.
சீறிப் பாய்ந்த பேரலைகள் பல மீட்டர் தூரத்திற்கு வசிப்பிடங்களுக்குள் புகுந்து மக்களை சிதற வைத்து, வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது. இந்த கோர தாண்டவத்திற்குப் மனிதர்கள், ஆடு, மாடுகள், வயல்வெளிகள் என யாருமே தப்பவில்லை.
சுனாமி என்ற வார்த்தையையே கேட்டறியாத அப்பாவி மக்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் மடிந்து போயினர்.
இந்த கோரம் நடந்து ஓராண்டு முடிந்துவிட்டாலும் பாதிக்கப்பட்ட நாடுகள் இந்த தினத்தை இன்றும் பெரும் அச்சத்துடன் தான்நினைவு கூர்கின்றன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் ஒட்டுமொத்தமாக கடலின் கோரப் பசிக்கு இரையாகின.கடலூர், நாகப்பட்டிணம், சென்னையில் மட்டும் சுமார் 8,000 பேரின் உயிரை பலி கொண்டது சுனாமி. லட்சக்கணக்கான மக்கள்வீடுகளை, உடமைகளை இழந்தனர்.
நாகை மாவட்டத்தில் மட்டும் 6,063 பேர் (அரசு தகவல்படி) உயிரிழந்தனர். 1,922 பேர் காயமடைந்தனர். 73 கிராமங்கள்முற்றிலும் உருக்குலைந்தன. 80,000 குடும்பங்கள் சிதறிப் போயின. 47,000 வீடுகள் முற்றும் சேதமடைந்தன.
5,292 ஹெக்டேர் நிலங்கள் சீரழிந்தன. 2 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு இடம் பெயரக் கூடிய அவல நிலை ஏற்பட்டது.
கடலூர் மாவட்டமும் பெருத்த சேதத்தை சந்தித்தது. இங்கு 1,000 பேர் வரை உயிரிழந்தனர். 70,000 மக்கள் இடம் பெயர்ந்தனர்.50 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 745 ஹெக்டேர் நிலங்கள் பாழ்பட்டு போயின. 17,200 வீடுகள் சேதமடைந்து விட்டன.
இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 824 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சோகச் சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவடைந்தாலும் அதிலிருந்து மக்கள் இன்னும் மனதளவில்மீளவில்லை.
சேதமடைந்த வீடுகளுக்குப் புதிய வீடுகள் பல பகுதிகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. குடும்பங்களை இழந்தவர்களுக்குஅரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் கொடுத்த பண உதவியால் பொருளாதார இழப்பிலிருந்து அவர்கள் ஓரளவுக்கு மீண்டுள்ளனர்.பலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
கணவர்களை இழந்த பல பெண்கள் மறுமணம் செய்து கொண்டுள்ளனர். மனைவி, குழந்தைகளை இழந்த பலர் மீண்டும்திருமணங்கள் செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் தற்போது நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் சீரிய முயற்சிகளால் பல பகுதிகளில் மாற்று வாழ்விடங்கள் வழங்கப்பட்டுள்ளன, அரசின்பல்வேறு உதவிகளும் அவர்களுக்குக் கிடைத்துள்ளன.
இருப்பினும் இன்னும் கூட தங்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்ட அந்த கருப்பு ஞாயிற்றுக்கிழமையை அவர்களால்மறக்க முடியவில்லை.
சுனாமி தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்களும், விவசாயிகளும் தான். இவர்களின் மீனவர்களின் நிலைதான் படுமோசம். இன்னும் கூட பலரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.
பல தொண்டு நிறுவனங்கள் சேதமடைந்த படகுகள், வலைகளுக்குப் பதில் புதியவற்றை கொடுத்துள்ளன. இருப்பினும் கூடஅத்தனை பேருக்கும் அவை கிடைத்து விட்டன என்று கூற முடியாது.
பெரும்பாலானவர்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. ஒரு சில பகுதிகளில் தான்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் இன்னும் தாற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பெரும் உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றால் கடலுக்குப் பக்கத்தில், கடலைத் தொந்தரவுசெய்யும் விதத்தில் இல்லாமல், சற்றே தூரப் போய் விட வேண்டும் என்ற உண்மையை மட்டும் மக்கள் ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்கள்.
உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சிறப்புப் பிரார்த்தனைகள் நடக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், ஒரே இடத்தில் 416 பேர் புதைக்கப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடமெளனம் அனுஷ்டித்தும், மெழுகுவர்த்திகள் கொளுத்தியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவிலில் 42 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர் கிராமங்களில்கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை சீனிவாசபுரத்தில் 5 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
கடந்த சுனாமித் தாக்குதலின் தாய், தந்தையர், உற்றார், உறவினர்களை இழந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளும் இன்றுசோகமயமாகக் காணப்பட்டனர். கடலூர், நாகை, கன்னியாகுமரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்து வரும்இந்தக் குழந்தைகளுக்கு ஏராளமான தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவற்றைகண்ணீர் மல்க அக்குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.
சுனாமிக்கு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.படகுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து துக்கம் அனுஷ்டித்தனர்.