தலைவர்களின் (அரசியல்) பொங்கல் வாழ்த்து
சென்னை:
பொங்கல் திருநாளையொட்டி ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள்மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதில் பர்னாலா தவிர மற்ற தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளில் எல்லாமேவாழ்த்தை விட அரசியல் செய்தியே தூக்கலாக உள்ளது.
பொங்கல் பண்டிகை உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அபரிமிதமான விளைச்சலைக் கொண்டு வரும்விவசாயிகளின் விழா இது. இந்த வேளையில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற அனைவரும் பிரார்த்திப்போம்என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்தியில், உழழைப் போற்றி உயர்வு பெற்ற தமிழர்களின் திருநாள், உழவர் மகிழும்திருநாள். காலமெல்லாம் களிப்போடு வாழ இந்த அரசு உழவர் பாதுகாப்புத் திட்டத்தைத் தந்தது.
பொய்த்திருந்த வானம் பொங்கிப் பொழிந்ததால், காய்ந்திருந்த தமிழ் நிலத்தில் வெள்ளம் பொங்கிப் பெருகியது. வளம்கொடுக்கும் மழையே மக்கள் நலன் கெடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த இடர்பாட்டில் சிக்கியவர்களுக்கு இதுவரைஇல்லாத அளவுக்கு பேருதவி வழங்கி பெரும் துயர் துடைத்தோம்.
இந்த பொங்கல் திருநாளின்போது புது உறுதி ஏற்போம். இயற்கை இடர்களின் வடுக்களை அகற்றி தொடர்ந்து உழைக்க உறுதிஎடுப்போம். பொங்கட்டும் பொங்கல், பூக்கட்டும் புதுவாழ்வு, எங்குமுள்ள தமிழர்கள் இன்பத்துடன் வாழட்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இதுவரை இல்லாத அளவுக்கு பேருதவி வழங்கி பெரும் துயர் துடைத்தோம் என்று கூறியுள்ளதன் மூலம் உங்கள் வாக்குஎங்களுக்கே என்கிறார் முதல்வர்.
கருணாநிதி:
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கலைக் கொண்டாடுவதே பாடுபட்டதை எண்ணிக் களிக்கவும்,பயன் கிடைத்ததை எண்ணிப் பார்த்து ஊக்கம் பெறவும்தான்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டு காலமாக தமிழகத்தில் யாருமே உற்சாகமாக பொங்கல் கொண்டாடவில்லை. அடுத்ததிருநாளிலாவது புதுவாழ்வு மலர்ந்திட்ட பொங்கலாக கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.
அடுத்த பொங்கலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது கருணாநிதியின் வாழ்த்தில் உள்ள உட்கருத்து.
ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பொங்கல் பண்டிகை தமிழர்களின் திருநாள். இந்த தினத்தில் அனைவரது வாழ்விலும் இன்னல்கள் எல்லாம் அகன்று மகிழ்ச்சிபொங்கிட வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் எங்கும், எதிலும் தமிழே ஆட்சி செய்ய வேண்டும். அதற்கு தமிழர்களின் ஆட்சி அமைய வேண்டும். அத்தகையஆட்சியை உருவாக்குவோம் என்பதே இந்த ஆண்டின் தமிழ் உணர்வு மிக்க எல்லோரது பொங்கல் வாழ்த்தாக இருக்க வேண்டும்.
எதையும் மறைத்துப் பேசத் தெரியாதவர் ராமதாஸ். நேரடியாகவே விஷயத்தைச் சொல்லிவிட்டார்.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதகுல வாழ்வுக்கே அச்சாணியான வேளாண்மை செய்கின்ற உழவர் பெருங்குடி மக்களின் வாழ்க்கை கடந்த பலஆண்டுகளாகவே நிம்மதியாக இல்லை. அதிலும் கடந்து சென்ற ஆண்டில் தமிழகத்தின் பல பகுதிகளில் பெரு மழையாலும்,வெள்ளப் பெருக்காலும் விளை நிலங்களும் பயிர் தொழிலும் நாசம் ஆகியதால் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைநொறுங்கிப் போனது.
அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளம் பெறுக வேண்டும். தை பிறந்தால் நல்ல வழி பிறக்கும் என்பதுஅனுபவப்பூர்வமான தமிழர்களின் நம்பிக்கை. தமிழர்களின் கவலைகள் நீங்க இந்தத் தைப் பொங்கல் தோரண வாயிலாகஅமையட்டும் என்று கூறியுள்ளார்.
இவரும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாசூக்காக கூறியிருக்கிறார்.
விஜய்காந்த்:
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மஞ்சுவிரட்டு என்னும் வீரம் உணர்த்தும் எளிமையான விழா தான் பொங்கல். கடந்த ஆண்டில் இயங்கை கொடுத்த அத்தனைகடும் சோதனைகளில் இருந்தும் மீண்டும் விவசாய பெருங்குடி மக்கள் புது வாழ்வு பெற மத்திய, மாநில அரசுகள் அனைத்துஉதவிகளையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதாவது இதுவரை சரியான உதவியை மத்திய (திமுக) அரசும், மாநில அரசும் (அதிமுக) செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வீரப்பன்:
எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்குஉண்மையான பொருளை இந்த ஆண்டு தரப் போகிறது என்று கூறியுள்ளார்.
ஆட்சி மாறப் போகிறது என்ற தன் மன ஆர்வத்தை பொடி வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.