கெளடா-குமாரசாமி சந்திப்பு: ஆட்சி தப்புமா?
பெங்களூர்:
மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவே கெளடா இன்று தனது மகனும் கட்சியின் அதிருப்தித் தலைவருமான குமாரசாமியைதிடீரென சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியை உடைக்க வேண்டாம் என்றும், தரம்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசைக்கவிழ்க்க வேண்டாம் என்றும் குமாரசாமியை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.மேலும் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டாம் எனவும் குமாரசாமியை அவர் நிர்பந்தித்ததாகத் தெரிகிறது.
முன்னதாக தனது தந்தையை சந்திக்க குமாரசாமி மறுத்து வந்தார். அவரையும் கெளடாவையும் சந்திக்க விடாமல் பாஜக மற்றும்அதிருப்தி மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் தடுத்து வந்தனர்.
இருவரும் சந்தித்து சமரசம் ஏற்பட்டுவிட்டால் திட்டமிட்டபடி தரம்சிங் அரசைக் கவிழ்க்க முடியாது, தங்களால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என பாஜக கருதியது. இதனால் இச் சந்திப்பைத் தவிர்க்குமாறு கோரி வந்தது.
இந் நிலையில் கெளடாவுக்கு துணை ஜனாதிபதி தருவதாக காங்கிரஸ் தலைமை ஆசை காட்டியதாகத் தெரிகிறது. தரம்சிங்ஆட்சியைக் காப்பாற்றினால், துணை ஜனாதிபதி பதவி தவிர மத்தியில் உங்கள் கட்சியின் எம்பிக்களுக்கு அமைச்சர் பதவியும் தரத்தயார் என காங்கிரஸ் தலைமை கெளடாவிடம் உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் மகனை கெளடா சமரசம் செய்துவிடுவார் என காங்கிரஸ் கருதுகிறது. ஆனால், எனது தந்தையை சந்தித்தாலும் கூடஎனது நிலையில் இருந்து மாற மாட்டேன் என குமாரசாமி கூறி வந்தார்.
இந் நிலையில் கெளடாவின் மூத்த மகன் பாலகிஷருஷ்ணாவின் இல்லத்தில் தந்தை-மகன் சந்திப்பு இன்று திடீரென நடந்தது.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெளடா, எனது மகன் கட்சியைக் காப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.அவர் செய்தது கட்சியைக் காக்கத் தான். இல்லாவிட்டால் கட்சியை காங்கிரஸ் உடைத்திருக்கும்.
கடந்த 18 மாதங்களாக என்னையும் கட்சியையும் காங்கிரஸ் கேவலப்படுத்தியதால் இந்த முடிவை எடுத்ததாக குமாரசாமிகூறினார். இருப்பினும் அவரிடம் சில விஷயங்களைக் கூறியிருக்கிறேன்.
அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நினைக்கிறேன். இப்போது கோவாவில் தங்கியுள்ள கட்சி எம்எல்ஏக்களுடன் பேசிவிட்டுமுடிவை அறிவிப்பதாக குமாரசாமி தெரிவித்தார்.
சோனியா எப்போது அழைத்தாலும் சந்திக்க நான் தயார் என்றார்.
உடனிருந்த குமாரசாமி கூறுகையில், நான் எனது தந்தையின் உடல் நலம் விசாரிக்கவே வந்தேன். எனது கட்சியினரின்கோரிக்கைக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருந்து பின் வாங்கமாட்டேன்.
கோவாவில் இருந்து தந்தையை சந்திக்க தனி ஹெலிகாப்டரில் வந்த குமாரசாமி உடனடியாக கோவா திரும்பிவிட்டார்.
கோவாவில் கெளடாவின் சமசரத் திட்டம் குறித்து எம்எல்ஏக்களுடன் குமாரசாமி விவாதிப்பார் என்று தெரிகிறது. இதன் பின்னரேஎன்ன முடிவு எட்டப்படுகிறது என்பது தெரியவரும்.
ஆனாலும், குமாரசாமி தலைமையில் பாஜக-மதசார்பற்ற ஜனதா தள அரசு வரும் 28ம் தேதி பதவியேற்கும். அதில் எந்த மாற்றமும்இருக்காது என மாநில பாஜக தலைவர் எதியூரப்பா கூறியுள்ளார்.
குமாரசாமி தனது நிலையில் இருந்து பின் வாங்க மாட்டார் என்றார்.
ஆனால், கெளடாவின் வலது கரமான அமைச்சர் சிந்தியா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்ககட்சி எம்எல்ஏக்களில் பலருக்கு விருப்பமில்லை. குமாரசாமியுடன் போய்விட்டாலும் கூட அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். விரைவில் குமாரசாமியின் நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.