கருணை தாயே, அம்மா: பொன்னையன் அறிக்கை
சென்னை:
எனக்கு, பரிவுடன் பதவி தந்து அழகு பார்த்த இதய தெய்வம், கருணைத் தாய், அம்மா அவர்களுக்கு எனக்கு எந்தப் பதவிகொடுக்கவும் எடுக்கவும் முழு உரிமை உண்டு என நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
வெளியில் தலைகாட்டுவதை அறவே தவிர்த்து வரும் பொன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கை:என்னைப் பற்றி எதிர்க் கட்சி ஆதரவு பத்திரிக்கைகள் (கராத்தேவைப் போலவே தலைமறைவாகிவிட்டதாக) பொல்லாத கற்பனைசெய்திகளை வெளியிட்டு வருகின்றன.
புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு என்றும் விசுவாசமான தொண்டன் நான். 13 வருடம் அரசியலில் ஒதுங்கி இருந்த எனக்குதாயுள்ளத்தோடு மீண்டும் அங்கீகாரம் தந்தவர் அம்மா. காலெமெல்லாம் கருணைத் தாயின் உண்மைத் தொண்டனாக இருப்பேன்.
13 ஆண்டுகள் அரசியலில் இல்லாத எனக்கு, அம்மாவின் சுக துக்கங்களில் அந்தக் கால கட்டத்தில் பங்கேற்காத எனக்கு,பரிவுடன் பதவி தந்து அழகு பார்த்த இதயத் தெய்வம் கருணைத் தாய் அம்மா அவர்களுக்கு எனக்கு எந்தப் பதவி கொடுக்கவும்எடுக்கவும் முழு உரிமை உண்டு.
அம்மா, புரட்சித் தலைவியின் நேர்மையான, தூய்மையான ஆட்சியில் நானும் தினமும் அரசுப் பணி ஆற்றுகிறேன் (பணிநாட்களில்).
என் மனைவி சென்னையில் 33 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். என் மகன்கள் அரசியலில் இல்லை.வெளிநாட்டில் கெமிக்கல் என்ஜினியர்களாக மருந்து உற்பத்தி செய்யும் தொழிலில் நல்ல நிலையில் உள்ளனர்.
கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த நான் எப்போதும் அம்மாவுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
சிறுசேரி நிலத்தை அடிமாட்டு விலைக்கு அரசிடம் இருந்து வாங்கிய சிங்கப்பூர் நிறுவனத்தாரிடம் 30 சதவீத நிலத்தை கட்டிங்போட பொன்னையனின் மகன் முயன்றாகவும், இதை அறிந்தே அவரை ஜெயலலிதா ஓரங்கட்டியதாகவும் ஒரு பேச்சு உலாவருவது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தான் ஓரங்கட்டப்படுவதற்கு மன்னார்குடி வகையறாவே காரணம் என்று பொன்னையன் கருதுகிறாராம்.சமீபத்தில் அமைக்கப்பட்ட அதிமுக தேர்தல் பணிக் குழுவில் ஓ.பியோடு பொன்னையனும் இடம் பெற்றனர். ஓபியிடம் 117தொகுதிகளும் பொன்னையனிடம் 117 தொகுதிகளும் ஒப்படைக்கப்பட்டன.
இதில் ஓ.பியைப் பொறுத்தவரை போயஸ் தோட்டத்து சக்தி நம்பர் டூவைக் கேட்டுத் தான் தொகுதிக்கு ஆட்களைப் போடுவார்.ஆனால், பொன்னையன் இந்த விஷயத்தில் கொஞ்சம் வேறு மாதிரியானவர். சக்தி டூவுக்கு அதிகமான முக்கியத்துவம் தராதவர்.
இதனால் தன் வசம் கொடுக்கப்பட்ட 117 தொகுதிகளுக்கும் தனது ஆட்களைப் போட்டு, நம்மையே ஓரங்கட்டிவிடுவார் எனமன்னார்குடி சக்தி பயந்து பொன்னையனுக்கு எதிராக காய் நகர்த்தியதாகவும், இதை அறிந்த பொன்னையன் சக்தி டூவிடம்மோதியதாகவும், அதையடுத்து கட்சியில் ஓரம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.