பரிதிக்கு எதிராக திருமா: ஜெ போடும் பிளான்!
சென்னை:
சென்னை எழும்பூர் மற்றும் காட்டுமன்னார்குடி ஆகிய இரண்டு தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
அதிமுக அணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். எந்தெந்த தொகுதிகள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.9 தொகுதிகளில் பெரும்பாலானவை தனித் தொகுதிகளாகவே இருக்கும். ஓரிரு தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இதில் யார், யார் போட்டியிடப் போவது என்பது குறித்து ஆலோசனைகளை கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் திருமாவளவன் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது, முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்ட ஒரு கோரிக்கையை கட்சித் தலைவர்களிடம் திருமா. கூறினாராம்.
அதாவது நீங்கள் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுங்கள், ஆனால் நிச்சயம் எழும்பூர் தொகுதியிலும் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று திருமாவளவனிடம் கோரினாராம் ஜெயலலிதா.
இதற்கு முக்கியக் காரணம் அந்தத் தொகுதியின் ஸ்டார் எம்எல்ஏவான பரிதி இளம்வழுதி தான். திமுகவின் இளம் எம்எல்ஏக்களில் ஒருவரான பரிதி, தனி ஆளாக சட்டசபையில் அதிமுகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்.
19991ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முன் திமுக சார்பில் கருணாநிதியும் பரிதியும் மட்டுமே வென்ற நிலையில், கருணாநிதி சட்டசபைக்கு வருவதைத் தவிர்த்தார்.
அப்போது தனியாக சட்டசபைக்கு வரும் பரிதி, ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் அலற வைப்பார்.
மிகச் சிறந்த பேச்சாளரான பரிதி, வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல குத்துவதிலும் வல்லவர். பல நேரங்களில் சட்டசபையில் இருந்து குண்டு கட்டாக தூக்கி வெளியே போடப்பட்டவர்.
தனது ஆவேசப் பேச்சாலும் புத்திசாலித்தனமான பேச்சாலும் அரசை மடக்கும் பரிதிக்கு பதில் சொல்லக் கூடிய திறமை வாய்ந்த அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ இல்லாத நிலையில் தனி நபரான பரிதியிடம் அதிமுகவினரும் முதல்வர் ஜெயலலிதாவும் சட்டசபையில் திண்டாடுவதுண்டு.
இதனால் அடிக்கடி பரிதி சபைக்கு வெளியே அவைக் காவலர்களால் தூக்கி வரப்பட்டு வீசப்படுவார்.
எம்ஜிஆர் காலத்தில் துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான் மாதிரி ஜெயலலிதா ஆட்சியில் பரிதி என்றாலே சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
இதையடுத்து கடந்த தேர்தலில் பரிதியைத் தோற்கடிக்க ஜான் பாண்டியனை களமிறங்கினார் ஜெயலலிதா. தாதாகிரி வேலைகளுக்குப் பெயர் போன ஜானும் எழும்பூர் தொகுதியை கலங்கடித்தார்.
தேர்தல் நாளன்று அந்தத் தொகுதியில் சரமாரியாக கள்ள வாக்குகளும் குத்தப்பட்டன. பரிதியின் வீட்டையும் அடித்து நொறுக்கினர் ஜான் பாண்டியன் தரப்பினர்.
போலீஸ் உதவியுடன் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டும், அதையும் மீறி 86 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி வென்றார்.
இம்முறையும் அதே தொகுதியில் தான் பரிதி போட்டியிடவுள்ளார். அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவேசத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் பரிதியை எதிரகொள்ளும் திறன் மிக்க வலுவான வேட்பாளர் இல்லை.
இதையடுத்து திருமாவளவனின் உதவியை நாடியுள்ளார்.
திருமாவளவனை பரிதிக்கு எதிராக களம் இறக்கி அவரைத் தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ளார். திருமாவளவனுக்கு சென்னை தலித் மக்களிடமும் நல்ல செல்வாக்கு உள்ளது.
எனவே அந்த செல்வாக்கு பிளஸ் அதிமுக ஆதரவு ஆகியவற்றின் மூலம் பரிதியை காலி செய்து விடலாம் என போயஸ் தோட்டம் கணக்குப் போட்டுள்ளது.
இதற்காகவே எழும்பூரிலும் போட்டியிடுங்கள் என்று ஜெயலலிதா திருமாவைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதை திருமாவும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.
எனவே அம்மாவின் ஆசைக்காக எழும்பூர், தனது விருப்பத்திற்காக காட்டுமன்னார்கோவில் என இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம் திருமா.