For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பயிற்சியாளராக ரிச்சர்ட்ஸ் விருப்பம்

By Staff
Google Oneindia Tamil News

செயின்ட் பீட்டர்ஸ் (ஆண்டிகுவா):

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ரிச்சர்ட்ஸ். சிறந்த பேட்ஸ்மேனாகவும், அருமையான சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர் ரிச்சர்ட்ஸ்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு தனக்கு அளிக்கப்பட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ரிச்சர்ட்ஸ் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட் அணியில் நானும் பங்கு (பயிற்சியாளராக) வகிக்க விரும்புகிறேன்.

எனக்கு பயிற்சியாளர் வாய்ப்பு அளிக்கப்பட்டால், இந்திய அணியின் மனோரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பேன். வீரர்களின் மன நிலை திடமாக இருந்தால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

உலகின் தலை சிறந்த அணிகளின் வீரர்கள் பலருக்கு நான் மனோதத்துவ பேச்சுக்களைக் கொடுத்துள்ளேன். அவை அவர்களுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. எனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் அங்கும் இதை பயன்படுத்த முயற்சிப்பேன்.

மன ரீதியில் உறுதியாக இல்லாத காரணத்தால்தான் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. தற்கால கிரிக்கெட்டில் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. நெருக்குதல்கள் அதிகம் உள்ளன. இவற்றை சமாளிக்க மன உறுதி மிகவும் அவசியம். அப்போதுதான் வெற்றியை நினைத்துப் பார்க்க முடியும்.

இந்தியாவிடம் மிகச் சிறந்த அணி உள்ளது. ஆனால் வீரர்களிடம் மன உறுதி இல்லை. ஆஸ்திரேலிய அணி வலுவாக இருக்கிறது என்றார், அதற்கு காரணம் அதில் உள்ள 11 வீரர்களுமே மிகச் சிறந்த மனோ திடத்துடன் இருப்பதுதான்.

நாம் எப்படிச் சிறந்தவர்கள் என்பது முக்கியம் அல்ல, எப்படி வலுவானவர்களாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சச்சின் டெண்டுல்கரின் எதிர்காலம் குறித்து என்னால் கணிக்க முடியாது. தனிப்பட்ட ஒரு வீரர் குறித்து என்னால் ஆரூடம் கூற முடியாது. ஆனால், டெண்டுல்கர் சரியாக விளையாடவில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது. எனக்கு மட்டுமல்ல, அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் அது ஏமாற்றமே.

நான் மட்டும் தோல்விக்குக் காரணம் இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியுள்ளதை நான் ஆமோதிக்கிறேன். காரணம் இது குழு விளையாட்டு. அனைவருமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தனி நபர் யாரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது.

என்னைப் பொறுத்தவைர ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்தான் மிகச் சிறந்த கேப்டனாகவும், வீரராகவும் திகழ்கிறார். அவர் பேட் செய்யும்போது பாருங்கள். மிகுந்த ஆர்வத்தோடும், வெற்றி வெறியோடும் அவர் விளையாடுகிறார். இளம் வீரர்களுக்கு அவர் மிகச் சிறந்த உதாரண புருஷராக இருக்கிறார்.

நட்சத்திர வீரர்களும் சில நேரங்களில் தோல்வி அடைவது உண்டு. ஆனால் எல்லா நேரமும் தோல்வி அடைவது சரியான செயலாக இருக்க முடியாது.

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிர்ச்சி தோல்விகள் சாதாரணமானதுதான். எதிர்பாராத வகையில் வெளியேறுவதை ஜீரணிக்க முடியாதுதான். நாங்களும் கூட 1983ம் ஆண்டு இந்தியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்றபோது இவ்வாறுதான் வேதனை அடைந்தோம்.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் யார் வெல்வது என்பதைக் கணிப்பது கடினமாக உள்ளது. இருந்தாலும் ஆஸ்திரேலியர்கள் வலுவானவர்களாகவே திகழ்கிறார்கள். ஆனாலும் மற்ற அணிகளுடன் கடுமையாகப் போராடியே அவர்கள் இறுதிப் போட்டியை அடைய முடியும். அங்கு போவது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றார் ரிச்சர்ட்ஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X