மாணவியிடம் முத்தம் கேட்ட ஆசிரியர் கைது
கோவைசெய்முறைத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் போட வேண்டுமானால் தனக்கு முத்தம் தர வேண்டும் என எம்எஸ்சி மாணவியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூர பிரிவின் தலைவராக இருப்பவர் பிலிப். லீனா என்ற எம்.எஸ்.சி. முதலாமாண்டு மாணவியின் மீது பிலிப்புக்கு மோகம் பிறந்துள்ளது.
அவ்வப்போது அவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவாராம். பிலிப்பின் நோக்கத்தை அறிந்த லீனா, அவரிடம் எச்சரிக்கையாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் செய்முறைத் தேர்வு வந்துள்ளது.
லீனாவைக் கூப்பிட்ட பிலிப், கூடுதல் மார்க் போடுகிறேன், பதிலுக்கு எனக்கு அழுத்தமாக ஒரு முத்தம் தா என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ந்து போன லீனா, முடியாது என்று கூறி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பின்னர் தனது அறைக்குத் திரும்பிய லீனா, மாட்டுச் சாணத்தில் ரசாயனக் கலவையைக் கலந்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர் பிலிப் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தான கிருஷ்ணன் தெரிவித்தார்.