பழங்குடியினர் தாக்கி 50 பாக். தீவிரவாதிகள் பலி
டேரா இஸ்மாயில் கான் (பாகிஸ்தான்):பாகிஸ்தானின் பழங்குடியினர் நடத்திய திடீர் தாக்குதலில், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் தெற்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள டேரா இஸ்மாயில்கான் என்ற இடத்தில் இந்த சண்டை நடந்துள்ளது.
தெற்கு வசிரிஸ்தானில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இவர்களை அப்பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள பஸ்தூன் பழங்குடி வகுப்பினர் விரும்பவில்லை. அப்பகுதியில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து விரட்ட உறுதி பூண்டுள்ள அவர்கள் திடீரென தாக்குதலில் இறங்கினர்.
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று நடந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
வானா என்ற இடத்தில் உள்ள ஒரு கிராமத்தை சூழ்ந்த பழங்குடியினர் அங்குள்ள தீவிரவாதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 44 தீவிரவாதிகள் மற்றும் ஐந்து பழங்குடியினர் உயிரிழந்தனர் என்று தெற்கு வசிரிஸ்தான் பிராந்திய அரசு நிர்வாகி ஹுசைன்ஸாதா கான் கூறினார்.
அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதுவரை 40 தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். இந்த சண்டைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மறைமுகமாக பழங்குடியினருக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.
சண்டையைத் தொடர்ந்து இப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பாதுகாப்பான மலைப் பகுதிகளுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications