திருச்சி விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்
திருச்சி:திருச்சி விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தற்போது வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 26ம் தேதி முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று ஒரு கடிதம் கிடந்தது. இதை எடுத்துப் பார்த்தபோது, அதில், விமான நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் விரைந்து வந்து விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இதில் குண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள், பார்வையாளர்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாகனங்கள் அனைத்தும் ஒரு வழிப் பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கடிதத்தை விமான நிலையத்தில் போட்டு விட்டுச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.