பைக்குடன் அரசு பஸ் மீது மோதி இளைஞர் தற்கொலை-பஸ் சாம்பல்
மகாபலிபுரம்:ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசுக்கு சொந்தமான அரசுப் பேருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடம்பாடி பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வேகமாக வந்தார். நேராக பேருந்து மீது பயங்கரமாக மோதினார். இதில் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
பேருந்தில் தீப்பிடித்துக் கொண்டவுடன் பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் அலறி அடித்தபடி கீழே இறங்கி உயிர் தப்பினர். மொத்தம் 61 பேர் பேருந்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
போலீஸார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வைத்திருந்த ஒரு டைரியைக் கைப்பற்றினர்.
அவரது பெயர் ரகுபதி. 23 வயதாகும் அவர், விருத்தாச்சலம் அருகே உள்ள முப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
பலரைக் காதலித்துள்ளார் ரகுபதி. எல்லாம் ஒரு தலைக் காதல். எந்தப் பெண்ணும் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது.












Click it and Unblock the Notifications