மத்திய, மாநில அரசுகள் மெத்தனமே காரணம் - விஜயகாந்த்
சென்னை:மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கின் காரணமாகவே காஞ்சிபுரம் அருகே நடந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழக்கக் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அகரம் பகுதியில், வேன் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
இதே இடத்திற்கு அருகில், புதுப்பாக்கம் ஆளில்லா ரயில் கிராசிங்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 17 பேர் பலியானார்கள். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் சுதாரிக்காமல், அலட்சியப் போக்கில் நடந்து கொண்டதால்தான் இப்போது இன்னொரு கோர விபத்து நடக்க காரணமாகி விட்டது.
ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் இன்னும் கூட ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை. தற்போது விபத்து நடந்துள்ள இடத்திலும் ரயில்வே கேட் இல்லை.
எனவே இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார் விஜயகாந்த்.