விடைபெற்றார் லாரா-கடைசி போட்டியில்இங்கிலாந்திடம் தோற்றது மே.இ. தீவு
பிரிட்ஜ்டவுன்:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பர் 8 ஆட்டத்தில் கெவின் பீட்டர்சன் போட்ட அபார சதத்தால் இங்கிலாந்து அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியுடன் பிரையன் லாராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நேற்று பிரிட்ஜ்டவுனில் நடந்த போட்டிதான் உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி சூப்பர் 8 ஆட்டம் ஆகும்.இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக லாரா அறிவித்திருந்ததால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் ரசிகர்கள் பெருமளவில் ஸ்டேடியத்தில் கூடியிருந்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் மேற்கு இந்தியத் தீவுகளை பேட் செய்யப் பணித்தது.
கெய்லும், ஸ்மித்தும் தொடக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். கெய்ல் அதிரடியாக ஆட, ஸ்மித் நிதான ஆட்டத்தைக் காட்டினார். கெய்ல் சிறப்பாக ஆடி 79 ரன்களும், ஸ்மித் 61 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய கேப்டன் லாரா அபாரமாக ஆடி பெரும் ரன்களை சேரப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப லாராவும் அடித்து ஆடத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக 18 ரன்களில் ரன் அவுட் ஆனார் லாரா. இதனால் ரசிகர்களும், லாராவும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
பின்னர் ஆடிய சாமுவேல்ஸ் 51 ரன்களும், சந்தர்பால் 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 49.5 ஓவர்களில் 300 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
பின்னர் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஸ்கோர் 7 ஆக இருந்தபோது ஸ்டிராஸை இழந்தது. இருப்பினும் கேப்டன் வாகன் சிறப்பாக ஆடி 79 ரன்களை எடுத்தார். ரவி போபாரா 26 ரன்களைச் சேர்த்தார். ஆனால் கெவின் பீட்டர்சன்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தார் 100 ரன்களைக் குவித்தார் கெவின்.
பால் நிக்ஸன் 38 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி 298 ரன்களை சேர்த்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது 9வது விக்கெட்டை இழந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பிராட் சமாளித்து ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
தனது கடைசிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோல்வியுற்றதால் லாரா பெரும் ஏமாற்றமடைந்தார். முன்னதாக அவர் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தபோது இங்கிலாந்து வீரர்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்களும் கைதட்டி வரவேற்றனர்.
போட்டி முடிந்ததும், ரசிகர்களை நோக்கி கண்ணீர் மல்க கைகளை ஆட்டியபடி லாரா விடைபெற்றார்.