போலி என்கவுண்டர்:ஷேக்கின் மனைவியும்கொல்லப்பட்டதாக குஜராத் அரசு தகவல்
டெல்லி:குஜராத் போலீஸாரால் என்கவுண்டர் என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்ட சொராப்தீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபியும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு கூறியிருக்கிறது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மனைவி கெளசருடன், ஷேக் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி அழைத்துச் சென்றனர் போலீஸார்.
பின்னர் 3 நாட்கள் கழித்து என்கவுண்டரில் ஷேக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீஸ். ஆனால் கெளசர் பீபி என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. அதுகுறித்து போலீஸ் தரப்பிலும் ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து ஷேக்கின் சகோதரர் உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், ஷேக் வேண்டும் என்றே என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அவர் தவிர ஷேக்கை போலீஸார் கொன்றதை நேரில் பார்த்த ஒருவரும் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதும் தெரிய வந்தது. இவர்கள் தவிர மேலும் சிலரும் கூட போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஷேக்கின் சகோதரர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி (முன்பு ஜெயலலிதாவுக்காக சில வழக்குகளில் இவர் ஆஜராகியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்) ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், ஷேக்குடன் அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவி கெளசர் பீபியை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி தருண் சாட்டர்ஜி தலைமையிலான பெஞ்ச், கெளசர் பீபி தொடர்பாக குஜராத் அரசிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்ப்பதாகவும், அது கிடைத்த பின்னர் இந்த வழக்கில் திங்கள்கிழமை அடுத்த கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதற்கிடையே மத்தியஅரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலன் குமார் முகர்ஜி, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினார்.
ஆனால் இதை துள்சி எதிர்த்தார். ஏற்கனவே இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசியலை புகுத்த மத்திய அரசு முயலுகிறது. அதை உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றார்.
முன்னதாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதே சிறந்தது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications