சன் டிவிக்கு மு.க.அழகிரி வக்கீல் நோட்டீஸ்
சென்னைசன் டிவியில் தொடர்ந்து எனது பெயரை அவதூறாகப் பயன்படுத்தி செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.அழகிரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக சன் டிவி நிர்வாகத்துக்கு அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மு.க.அழகிரியின் சார்பில் அவரது வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
அதில், மு.க.அழகிரி குறித்து உங்களது தொலைக்காட்சியில் அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். இந்த செய்தியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாகவும், ஆதாரமற்றதாகவும் உள்ளன.
லீலாவதி கொலை வழக்கில் மு.க.அழகிரியை சேர்க்கவும் இல்லை, அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இந்த வழக்கில் கூறப்படவும் இல்லை. அதுபோல மதுரை தினமலர் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கிலும் இவர் சேர்க்கப்படவில்லை.
முருகன் இட்லிக் கடை வழக்கில் மு.க.அழகிரி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் மீது மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மு.க.அழகிரிக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஆனால் மேற்கூறிய இந்த உண்மைகளை மறைத்து மு.க.அழகிரி மீது தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறீர்கள். உங்கள் தொலைக்காட்சியில், வெளியான செய்திகள் மு.க.அழகிரிக்கு அவதூறை உண்டாக்கும் வகையில் உள்ளது. பொதுமக்களிடையே அவருக்கு உள்ள நல்ல பெயரைக் கெடுக்கும் நோக்கில் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறீர்கள்.
அழகிரி பொதுமக்களுக்காக தன்னை அர்ப்பணித்து பொதுச் சேவை செய்ததன் காரணமாக பொதுமக்கள் ஆதரவு அவருக்கு உண்டு. ஆகவே பொதுமக்கள் மத்தியில், இவரது நற்பெயரைக் கெடுப்பதற்காக இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை செய்திகளாக ஒளிபரப்பி வருகிறீர்கள்.
ஆகவே இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற உடனேயே மு.க.அழகிரி பற்றி அவதூறாக செய்தி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை தொடர நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, சன் நியூஸ் செய்தி ஆசிரியர் டோயல் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.