பகுஜன் சமாஜ் கட்சி அபார வெற்றிமீண்டும் முதல்வராகிறார் மாயாவதி
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மாயாவதி மீண்டும் முதல்வர் பதவியை பிடித்துள்ளார்.
உ.பி. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபைத் தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.
இதில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு 204 இடங்கள் கிடைத்தன. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையை பகுஜன் சமாஜ் கட்சி பெற்றது.
இதுவரை ஆட்சியில்இருந்து வந்த முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சிக்கு 92 இடங்களே கிடைத்தன. இதன் மூலம் முலாயம் சிங் ஆட்சியை இழந்தார். அவர் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அதிக பரபரப்பை ஏற்படுத்திய பாஜகவுக்கு 57 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மற்ற கட்சிகளுக்கு 23 தொகுதிகள் கிடைத்துள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் கிடைத்துள்ளதால் உ.பியில் நீண்ட காலத்திற்குப் பிறு தனிக் கட்சி ஆட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
முதல்வர் முலாயம் சிங் யாதவ் தனது கட்சியின் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று மாலை ஆளுநர் ராஜேஷ்வரைச் சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்குகிறார்.
இன்று மாலை அல்லது நாளை காலை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் மாயாவதி சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். இதையடுத்து அவர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார்.