தலைமை ஆசிரியை மரணத்தில் மர்மம்:தூக்கு போட்டாரா? அடித்துக் கொலையா?
சேலம்:சேலத்தில் தலைமை ஆசிரியர் அடித்து கொல்லப்பட்டதாக அவரது தாயார் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
சேலத்தில் தாதகப்பட்டியில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சாந்தகுமாரி(33), கடந்த 12ம் தேதி திடீரென இறந்தார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அவரது தாய் ஆட்சியாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில் என் மகள் சாந்தகுமாரிக்கும், சேலத்தில் மாநகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் அதிகாரியாக உள்ள கிருஷ்ணமூர்த்திக்கும் 1994ல் திருமணம் நடந்தது.
12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது.
திருமணத்திற்கு பிறகு சாந்தகுமாரிக்கும் அவரது மாமியாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் மேல் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் குடிவந்தனர்.
சாந்திக்கு குழந்தையில்லாமல் இருந்ததால் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற பெங்களூருக்கு சென்றிருந்தோம்.
அந்த சமயத்தில் மகளின் கணவர் மாடியிலிருந்த ராஜஸ்தானி பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டார். அதனால் என் பெண்ணை வெறுக்க ஆரம்பித்தார், அடித்து துன்புறுத்தினார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி சாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார் என எனக்கு தகவல் தந்தனர். ஆனால் அவளை பார்த்தால் தூக்கு போட்டு கொண்டதற்கான அறிகுறியே தெரியவில்லை.
உறவினர் வரும்வரை காத்திருக்க சொன்னேன். ஆனால் அதற்குள் அவளது உடலை எரித்துவிட்டனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து விசாரணை நடத்தி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். ஆனால், அவள் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவுடன் சாந்தகுமாரி எழுதிய கடிதத்தையும் இணைத்திருந்தார். அதில் என் சாவுக்கு காரணம் என் புருஷன் தான், அவரது கொடுமை தாங்கமுடியவில்லை. எனக்கு துரோகம் செய்துவிட்டு சேட்டு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். குழந்தையை பார்த்துக் கொள்ளவும் என எழுதப்பட்டுள்ளது.