நள்ளிரவு கைது புகழ் கருணாநிதி வழக்கு ரத்து
சென்னை முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யக் காரணமாக அமைந்த சென்னை நகர மேம்பால ஊழல் வழக்கை கைவிட சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகும் எனத் தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரில், மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த மேம்பாலங்கள் கட்டும் பணியல் பெரும் முறைகேடுகள் நடந்ததாக கூறி முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கருணாநிதியை 2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தது போலீஸ். நாட்டையே உலுக்கியது இந்த கைது சம்பவம்.
இவ்வழக்கில் கிட்டத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2005ம் ஆண்டு மே மாதம் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவே இல்லை. பல காரணங்களால் வழக்கு இழுத்தடித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு குறித்து ஆராயப்பட்டது. அதில், வழக்கில் தொடர்புடைய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் அரசுப் பணியில் இருப்பது தெரிய வந்தது.
அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் விஷயத்தில் இது மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை, தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசு வக்கீல்கள் சிபிசிஐடியிடம் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கைவிட சிபிஐடி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு வக்கீல்களின் கருத்துக்களையும் சேர்த்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனவே விரைவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications