சென்னை புறநகரை உலுக்கிய இடி, மின்னல், மழை
சென்னை:சென்னை புறநகர்ப் பகுதிகளில் இரவில் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் அணல் குறைந்தது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னையை வறுத்து வந்த கடும் வெயில் கடந்த ஓரிரு நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னை புறநகர்பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.
தென் சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், சேலையூர், காட்டாங்கொளத்தூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் பெரு மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமென பாய்ந்தோடியது. இந்த மழை காரணமாக புறநகர்ப் பகுதிகளில் வெட்கை குறைந்து குளுமை குடி புகுந்தது.
இன்று மாலையும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் மீண்டும் வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.