கருணாநிதி பிறந்த நாள்: ஏற்பாடுகள் தீவிரம்-டிஜிட்டல் அழைப்பிதழ் ரெடி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திமுகவினர் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மிக நவீனமான டிஜிட்டல் அழைப்பிதழும் அச்சிடப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் திமுகவினர். லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி நவீன கணிணிக் கலக்கலுடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் சிறப்பை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுமையாக, தமிழ்த்தாய் வரவேற்புரை ஆற்றவும், திருவள்ளுவர் நன்றி கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான அழைப்பிதழிலும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய அந்த அழைப்பிதழைத் திறந்தால் இனிய குரலில் ஒரு பெண் பேசுகிறார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள். உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள், ஆயிரம் விளக்கு பகுதியின் சார்பில் அகம் மகிழ அழைக்கிறோம், வாருங்கள், வாருங்கள் என்று அந்தக் குரல் கூறுகிறது.
மேலும் அழைப்பிதழில் உள்ள முதல்வரின் படத்தை ஒரு பக்கம் சாய்த்தால் பெரியார் தெரிகிறார், மற்றொரு பக்கம் சாய்த்தால் அண்ணா தெரிவது போலவும் அசத்தியுள்ளனர்.
மொத்தத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக முதல்வரின் பிறந்த நாளைக் கொண்டாட திமுகவினர் ஏற்பாடு செய்து தடபுடல் படுத்தி வருகின்றனர்.