பாக்.: தீவிரவாதிகள் தாக்குதலில் 41 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் என்பதால் பாகிஸ்தானில் பதட்டம் நிலவுகிறது.
இஸ்லாமாபாத்தில் உள்ள சிவப்பு மசூதி எனப்படும் லால் மசூதிக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.
ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், போலீஸாரைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று தேரா இஸ்மாயில் கான் என்ற நகரில் காவல் நிலையம் ஒன்று தற்கொலைப் படைத் தீவிரவாதியால் தாக்கி தகர்க்கப்பட்டது. இதில் அந்தக் காவல் நிலையத்தில் இருந்த 26 போலீஸாரும் உயிரிழந்தனர்.
இதேபோல, ஸ்வாட் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனம் தற்கொலைப் படையினரால் தகர்க்கப்பட்டது. இதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த வாகனம் மட்டா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
மட்டா சம்பவத்தில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். நேற்று இந்த மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்த தற்கொலைப் படைத் தாக்குதல்களில் மொத்தமாக 41 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அதிக அளவில் ராணுவத்தினரும், துணை நிலை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications